

உத்தரப்பிரதேசத்தின் சாதுவான ‘பில்டர் பாபா’ வழக்கை அடுக்கு மாடிகள் கட்டுவதாகக் கூறி ரூ.11.5 கோடி மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு ஒப்படைத்த இந்த வழக்கை ஏற்க சிபிஐ மறுத்திருப்பது தெரிந்துள்ளது.
உ.பி.யின் காஜியாபாத்தை சேர்ந்தவர் சச்சின் தத்தா (37). டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் அடுக்குமாடிகள் கட்டுவதாக ‘பாலாஜி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ எனும் நிறுவனம் நடத்தி வந்தார். இவர், தனக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு எனக் கூறி சாதுவாகவும் மாறினார்.
இதை ஏற்ற சாதுக்களின் முக்கிய சபையான நிரஞ்சனி அஹாடா, கடந்த 2015 இல் ’மஹாமண்டலேஷ்வர்’ எனும் பட்டத்தை தத்தாவிற்கு அளித்தது. இதன் பின் தனது பெயரை சச்சிதாணந்தா கிரி எனவும் மாற்றிக் கொண்டார் தத்தா.
மஹாமண்டலேஷ்வர் பட்டத்தின் மூலம் அவர் ஒரு மடத்திற்கு அதிபதியாகவும் சச்சிணாந்தா கிரி திட்டமிட்டதாகக் கருதப்படுகிறது. இத்துடன் அவர், ஒரு சாதுக்கள் குழுவின் தலைவராகவும் பொறுப்பு ஏற்கவும் முயன்று வந்தார்.
இச்சூழலில், இதன் அடுத்த ஆறாவது நாளில் உ.பி.யின் நொய்டாவில் போலீஸாரின் சோதனை நடவடிக்கையில் ஒரு இரவு விடுதி சிக்கியது. இதை மஹாமண்டலேஷ்வரான சாது சச்சின் தத்தா நடத்துவதாகப் புகார்கள் எழுந்தன.
இதனால், கடும் கோபமடைந்த நிரஞ்சனி அஹாடாவினர் தாம் சச்சினுக்கு அளித்த மஹாமண்டலேஷ்வர் பட்டத்தை திரும்ப பெறுவதாக அறிவித்து விட்டனர். எனினும், இந்த சச்சின் தன் தலையில் முடியில்லாத தோற்றத்துடன், காவி உடைகளை களையாமல் தொடர்ந்தார்.
இதன் காரணமாக அவரை பொதுமக்கள் ’பில்டர் பாபா’ என அழைக்கத் தொடங்கினர். இந்த பாபாவும், காஜியாபாத் மற்றும் நொய்டா பகுதியில் அடுக்குமாடி வீடுகள் கட்டுவதாக கூறி பொதுமக்களிடம் முன்பணம் பெற்றார்.
வீடுகள் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டப்படாதது, வங்கிக்கடன் உள்ளிட்ட பல்வேறு மோசடி புகார்கள் பில்டர் பாபா மீது எழுந்தன. காஜியாபாத்தின் விஜயா நகர் மற்றும் நொய்டாவின் செக்டர் 58 காவல் நிலையங்களில் 19 மோசடி வழக்குகள் 2015 இல் பதிவாயின.
இதனால், பொருளாதாரக் குற்றப் பிரிவினரால் 2016 முதல் தேடப்பட்ட பில்டர் பாபா கடந்த பிப்ரவரி 2017 இல் லக்னோவில் கைது செய்யப்பட்டார். அப்போது முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாபாவின் வழக்கு பாஜக ஆளும் உ.பி. அரசால் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதில் ஜாமீன் பெற வேண்டி நேற்று முன்தினம் அவர் காஜியாபாத் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிமன்றத்தில் ஆஜரான சிபிஐயின் வழக்கறிஞர் கூறியது பலரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.
இதில் அவர், பில்டர் பாபாவின் வழக்கு உ.பி. அரசிற்கு திரும்ப ஒப்படைக்கப்பட்டு விட்டது எனவும், இதனால், சிபிஐ அவருக்கு ஜாமீன் அளிப்பதில் வாதிட முடியாது என்றும் விளக்கம் அளித்தார்.
இதனால், மீண்டும் பில்டர் வழக்கு, உ.பி. காவல்துறையின் விசாரணைக்கு மாற்ற வேண்டிய நிலைக்கு உள்ளானது. அதேசமயம், பஞ்சாபின் ஜலந்தரிலும் பில்டர் பாபாவிற்கு எதிராக சில மோசடி வழக்குகளும் பதிவாகி உள்ளன.