

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலாவும், அவரது அண்ணன் ஜெயராமனின் மனைவி இளவரசியும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்தனர். சசிகலாவுக்கு கடந்த 20-ம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து 21-ம் தேதி விக்டோரியா அரசுமருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், சிறையில் சசிகலாவுடன் ஒரே அறையில் இருந்தஇளவரசி, இருவருடன் தொடர்பில்இருந்த பெண் காவலர்கள், கைதிகள் உள்ளிட்ட 8 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள அதிகாரிகள் முடிவெடுத்தனர். நேற்றுமுன்தினம் மாலை சிறை மருத்துவமனையில் இளவரசிக்கு ஆன்டிஜன் பரிசோதனை மேற்கொண்ட போது, கரோனா தொற்று இல்லை என தெரியவந்தது.
ஆனால் இளவரசியின் மகன் விவேக் தரப்பில் அவருக்கு சி.டி.ஸ்கேன், ஆர்டிபிசிஆர் மூலம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து நேற்று மேற்கொண்ட பரிசோதனையில் இளவரசிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனே இளவரசி விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவருக்கும் மருத்துவர்கள் உரியசிகிச்சை அளித்து வருகின்றனர்.
உடல்நிலையில் முன்னேற்றம்
இதுகுறித்து விக்டோரியா மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ரமேஷ் கூறும்போது "சசிகலாவுக்கு கரோனா, நிமோனியா காய்ச்சலுக்கு உகந்த சிகிச்சை அளித்து வருகிறோம். அவருக்குகாய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் குறைந்து உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது" என்றார்.