Last Updated : 13 Jan, 2021 08:03 AM

 

Published : 13 Jan 2021 08:03 AM
Last Updated : 13 Jan 2021 08:03 AM

உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவில் மனுதாரர்களில் ஒருவரே இடம் பெற்றுள்ளார்: எவ்வாறு விவசாயிகளுக்கு நீதி கிடைக்கும்? காங்கிரஸ் கேள்வி

காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா : கோப்புப்படம்

புதுடெல்லி


வேளாண் சட்டங்கள் குறித்த சிக்கலைத் தீர்க்க உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவில் மனுதாரர்களில் ஒருவரே இடம் பெற்றுள்ளார். எவ்வாறு இந்தக் குழுவிடம் இருந்து விவசாயிகளுக்கு நீதி கிடைக்கும் என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்்த்து கடந்த 40 நாட்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம், சட்டங்களை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை விதித்து நேற்று உத்தரவிட்டது.

அதுமட்டுமல்லாமல் வேளாண் சட்டங்கள் குறித்த கவலைகள், பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கவும், சிக்கல்களைக் களையவும் 4 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. அந்தக் குழுவில், “ பாரதிய கிசான் யூனியன் தலைவர் பூபேந்தர் சிங் மான், ஷேத்கேரி சங்காதனா(மகாராஷ்டிரா) தலைவர் அனில் கான்வாட், சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு மையத்தின் தெற்காசியஇயக்குநர் பிரமோத் குமார் ஜோஷி, வேளாண் பொருளாதார வல்லுநர் அசோக் குலாட்டி” ஆகியோரை நியமித்தது.

இந்த குழு அரசுக்கு ஆதரவானது, குழுவில் உள்ள 3 உறுப்பினர்கள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானர்கள். விவசாயிகளுக்கு நீதி கிைடக்காது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா அளித்த பேட்டியில் கூறியதாவது:

உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவில் உள்ள உறுப்பினர்களின் நம்பகத்தன்மை குறித்து அரசின் வழக்கறிஞர்கள் யாரேனும் நீதிமன்றத்தில் வெளியிட முடியுமா.வரும் 15-ம் தேதி நடக்கும் விவசாயிகளுடனான பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி நேரடியாகப் பங்கேற்றுப் பேச வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் இந்தக் குழுவின் உறுப்பினர்கள் பெயர் பட்டியலை யார் அளித்தது எனத் தெரியவில்லை. அவர்களின் பின்புலம் ஏன் ஆய்வு செய்யப்படவில்லை, அவர்களின் நிலைப்பாடு குறித்து ஏன் ஆய்வு செய்யப்படவில்லை. அனைத்து உறுப்பினர்களும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானர்கள், பிரதமர் மோடிக்கு ஆதரவானவர்கள். எவ்வாறு இந்த குழுவிடம் இருந்து விவசாயிகளுக்கு நீதி கிடைக்கும்

அதிலும் குழுவில் உள்ள உறுப்பினர்களில் ஒருவர்தான் மனுதாரராக இருக்கிறார். எவ்வாறு மனுதாரர் ஒருவரை உச்ச நீதிமன்றம் குழுவில் நியமிக்க முடியும். 4 உறுப்பினர்களுமே வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானர்கள். இந்த குழு அமைக்கப்பட்டது குறித்து சுயஆய்வு செய்ய வேண்டும். இந்து குழுவிடம் இருந்து விவசாயிகளுக்கு நீதிகிடைக்காது.

தேசத்துக்கு உணவு வழங்கும் விவசாயிகள் டெல்லி எல்லைகளில் கடந்த 49 நாட்களாகப் போராடி வருகிறார்கள். தங்கள் வாழ்வுக்கும், வாழ்வாதரரத்துக்கும் போராடி வருகிறார்கள், ஆனால், மோடி அரசு அகங்காரத்துடன் அதை கவனிக்கவில்லை.

விவசாயிகளின் துயரம், மனவேதனை, வாழ்வுக்கான கண்ணீர், வாழ்வாதாரம் ஆகியவை குறித்து உச்ச நீதிமன்றம் கவனித்துள்ளது. இவை அனைத்தும் சில முதலாளிகளுக்காக மோடி அரசால் நிர்மூலமாக்கப்படுகிறது. உண்மையின் கண்ணாடியை அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ.பாப்டே காண்பித்துள்ளார்.

வேளாண் சட்டங்கள் திரும்பப்பெற வேண்டும், மாநிலங்களின் உரிமைகளை பறிக்கக்கூடியது என காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது. நுகர்வோருக்கு ஆதரவ இருக்கும் தேசத்தின் தூண்களான உணவுப்பாதுகாப்பு, குறைந்தபட்ச ஆதாரவிலை, உணவு பகிர்மான முறை, கொள்முதல் ஆகியவற்றை இந்தச் சட்டங்கள் சிதைத்துவிடும்

இவ்வாறு சுர்ஜேவாலா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x