பி.எம். கிசான் திட்டத்தில் தகுதியில்லாத 20 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.1,364 கோடி செலுத்திய மத்திய அரசு: ஆர்டிஐ தகவல்

கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Updated on
2 min read

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் தகுதியில்லாத 20.48 லட்சம் பயனாளிகளுக்கு மத்திய அரசு ரூ.1,364 கோடி வழங்கியுள்ளது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

சிறு, குறு விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது பி.எம். கிசான் திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் 2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள், கூட்டாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்காக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை 3 பிரிவுகளாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆர்டிஐ ஆர்வலரும், காமென்வெல்த் மனித உரிமை ஆர்வலருமான வெங்கடேஷ் நாயக் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மத்திய வேளாண் துறையில் மனுத்தாக்கல் செய்தார்.

அதில் கிடைத்த விவரங்கள் குறித்து வெங்கடேஷ் நாயக் கூறியதாவது:

''இரு பிரிவுகளில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. தகுதியற்ற விவசாயிகள், வருமான வரி செலுத்தும் விவசாயிகள் இரு பிரிவினரும் நிதியுதவி பெற்றுள்ளது ஆர்டிஐ மனுவில் தெரியவந்துள்ளது.

தகுதியற்ற விவசாயிகளில் நிதியுதவி பெற்றதில் 55.58 சதவீதம் விவசாயிகள் வருமான வரி செலுத்துவோர். மீதமுள்ள 44.41 சதவீதம் பேர் தகுதியற்ற பிரிவில் வரும் விவசாயிகள். கடந்த 2019-ம் ஆண்டிலிலிருந்து 1,364.13 கோடி ரூபாய், 2020, ஜூலை 31-ம் தேதிவரை தகுதியற்ற விவசாயிகளுக்கும், வருமான வரி செலுத்தும் விவசாயிகளுக்கும்தான் செலுத்தப்பட்டுள்ளது.

அரசின் சார்பில் அளிக்கப்பட்ட புள்ளிவிவரங்களே, இந்த நிதியுதவி தவறானவர்கள் கைகளுக்குச் சென்றுள்ளதைக் காட்டுகிறது. இந்தப் பலன்களை அனுபவித்தவர்கள் பெரும்பாலும் பஞ்சாப், அசாம், மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

பஞ்சாப்பில் மட்டும் 23.16 சதவீதம் அதாவது 4.74 லட்சம் தகுதியற்ற விவசாயிகள் நிதியுதவி பெற்றுள்ளார்கள். அதைத் தொடர்ந்து அசாமில் 3.45 லட்சம் (16.87%) விவசாயிகள், மகாராஷ்டிராவில் 2.86 லட்சம் பேர் (13.99%) பலன்களைப் பெற்றுள்ளனர். இந்த 3 மாநிலங்களில் உள்ள தகுதியற்ற விவசாயிகள் சேர்ந்து 54.03 சதவீதத் தொகையைப் பெற்றுள்ளனர்.

குஜராத் மாநிலம் 4-வது இடத்தில் தகுதியற்ற 1.64 லட்சம் (8.05%) விவசாயிகள், அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் 1.64 லட்சம் (8.01%) விவசாயிகள் நிதியுதவி பெற்றுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக ரூ.1,364.13 கோடி 68.20 தவணைகளில் ரூ.2 ஆயிரம் வீதம் செலுத்தப்பட்டுள்ளது. இதில் 49.25 லட்சம் வருமான வரி செலுத்தும் விவசாயிகளுக்கு 18.95 லட்சம் தவணைகளில் செலுத்தப்பட்டுள்ளது''.

இவ்வாறு நாயக் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in