மோடியுடன் ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கல் சந்திப்பு

மோடியுடன் ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கல் சந்திப்பு
Updated on
1 min read

இந்தியா பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கல், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

ஜெர்மனி நாட்டு பிரதமர் ஏஞ்செலா மெர்கல் 3 நாட்கள் அரசுமுறை பயணமாக நேற்று இரவு டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு மத்திய நிதித் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

அதன் பின்னர் அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அவர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இருநாட்டு இடையே பொருளாதாரம், வேளாண்மை, உள்நாட்டு பாதுகாப்பு, வளர்ச்சி, பாதுகாப்புத் துறை மேம்பாடு, நிதி தொடர்பான அணுகுமுறை உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து இருவரும் பேசினர்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் பிரிஸ்பேன் பயணத்தின்போது, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலாவை இந்தியா வரும்படி பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.

அப்போது கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழிப் பாடம் கற்பித்தலை கைவிட வேண்டாம் என பிரதமர் மோடியிடம் ஏஞ்செலா மெர்கல் கோரிக்கை விடுத்தார்.

பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் திறமையான தொழிலாளர்களை உருவாக்கும் முயற்சியில் பங்கேற்பதாக ஜெர்மனி ஏற்கெனவே உறுதி அளித்தது என்பது கவனிக்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in