இந்தியாவில் கரோனாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 97 லட்சத்தை நெருங்குகிறது: புதிதாக 24 ஆயிரம்பேருக்கு தொற்று

படம்: ஏஎன்ஐ
படம்: ஏஎன்ஐ
Updated on
1 min read

இந்தியாவில் கரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 97 லட்சத்தை நெருங்குகிறது. அதேநேரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24 ஆயிரத்து 712 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு ஒரு கோடியே ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 778 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 96 லட்சத்து 93 ஆயிரத்து 173 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 95.75ஆக உள்ளது.

கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 83 ஆயிரத்து 849 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2.80 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கரோனா வைரஸால் நேற்று மட்டும் 312 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 756 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவில் உயிரிழப்பு 1.45 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 93 பேர், மே.வங்கத்தில் 34 பேர், கேரளாவில் 22 பேர், உத்தரப்பிரதேசத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 16 கோடியே 53 லட்சத்து 8 ஆயிரத்து 366 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 10 லட்சத்து 39 ஆயிரத்து 645 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும் எட்டியது.

செப்டம்பர் 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11-ம் தேதி 70 லட்சத்தையும் தொட்டது. 29-ம் தேதி 80 லட்சத்தையும், நவம்பர் 20-ம் தேதி 90 லட்சத்தையும் , டிசம்பர் 19-ம் தேதி ஒரு கோடியையும் கடந்துள்ளது''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in