

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 96 லட்சத்தைக் கடந்துள்ளது. புதிதாக 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியி்ட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24 ஆயிரத்து 337 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு ஒரு கோடியே 55 ஆயிரத்து 560 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 96 லட்சத்து 6 ஆயிரத்து 111 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 95.53 ஆக உள்ளது.
கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து 3 ஆயிரத்து 639 ஆகக் குறைந்துள்ளது. தொடர்ந்து 15-வது நாளாக கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3.02 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கரோனா வைரஸால் நேற்று மட்டும் 333 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 810ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்பு 1.45 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 98 பேர் உயிரிழந்தனர். அதைத்தொடர்ந்து மே.வங்கத்தில் 40 பேர், கேரளாவில் 30 பேர், டெல்லியில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 16 கோடியே 20 லட்சத்து 98 ஆயிரத்து 329 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 9 லட்சத்து ஆயிரத்து 134மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும் எட்டியது.
செப்டம்பர் 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11-ம் தேதி 70 லட்சத்தையும் தொட்டது. 29-ம் தேதி 80 லட்சத்தையும், நவம்பர் 20-ம் தேதி 90 லட்சத்தையும் , டிசம்பர் 19-ம் தேதி ஒரு கோடியையும் கடந்துள்ளது''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.