

கேரளாவில் இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் புரையோடியுள்ள ஊழல், மதவாத, நயவஞ்சக அரசியலை பாஜக தொடர்ந்து மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் என பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.
கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடந்தது. முதல் கட்டத் தேர்தல் டிசம்பர் 8-ம் தேதியும், 2-ம் கட்டத் தேர்தல் 10-ம் தேதியும், 3-ம் கட்டத் தேர்தல் 14-ம் தேதியும் நடந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.
941 கிராமப் பஞ்சாயத்துகள், 152 மண்டலப் பஞ்சாயத்துகள், 14 மாவட்டப் பஞ்சாயத்துகள், 86 நகராட்சிகள், 6 மாநகராட்சிகளுக்குப் பிரதிநிதிகளை 2.76 கோடிக்கும் மேலான வாக்காளர்கள் தேர்ந்தெடுத்தனர்.
இந்தத் தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி பெரும் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி தோல்வியை தழுவியுள்ளது. பாஜக பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதேசமயம் கடந்த உள்ளாட்சித் தேர்தலை விட கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதுகுறித்து பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கூறியதாவது:
‘‘கேரள உள்ளாட்சித் தேர்தலில் கடந்த முறையை விட கூடுதல் வெற்றியை பாஜகவுக்கு தந்த மக்களுக்க எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கேரளாவில் இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் புரையோடியுள்ள ஊழல், மதவாத, நயவஞ்சக அரசியலை பாஜக தொடர்ந்து மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும்.’’ எனக் கூறியுள்ளார்.