பெங்களூருவில் ரூ.1 கோடி மதிப்பு நிலத்தை அனுமன் கோயிலுக்காக தானம் வழங்கிய இஸ்லாமியர்

ஹெச்.எம்.ஜி.பாஷா
ஹெச்.எம்.ஜி.பாஷா
Updated on
1 min read

பெங்களூருவில் இஸ்லாமியர் ஒருவர் தனக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தைஅனுமன் கோயிலுக்கு தானமாக கொடுத்துள்ளார்.

பெங்களூரு ஹொசக்கோட்டை அருகேயுள்ள பெலத்தூரைச் சேர்ந்தவர் ஹெச்.எம்.ஜி.பாஷா (65). ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுள்ள இவருக்கு ஓல்ட் மெட்ராஸ் சாலையை ஒட்டி 2 ஆயிரம் சதுர அடி நிலம் இருந்தது. இதில் அப்பகுதி மக்கள் சிறிய அளவில் அனுமன் கோயிலை கட்டி வழிபட்டு வந்தனர். கோயில் உள்ள நிலம் இஸ்லாமியருக்கு சொந்தமானது என்பதால் நீண்ட காலமாக அந்த கோயிலை புதுப்பிக்காமலும், திருவிழா நடத்தாமலும் இருந்துள்ள‌‌னர்.

இதனிடையே, முக்கிய சாலையை ஒட்டி இருந்ததால் இந்த நிலத்தை பல நிறுவனங்கள் பாஷாவிடம் ரூ.1 கோடி வரை விலைக்கு கேட்டுள்ளனர். இதற்குமறுப்பு தெரிவித்த அவர், அனுமான் கோயில் கட்டுவதற்காக அந்த நிலத்தை பெலத்தூர் கிராமத்தினருக்கு இலவசமாக வழங்கி உள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்த கிராம மக்கள் அனுமான் கோயிலை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இஸ்லாமியர் ஒருவர் அனுமன் கோயிலுக்கு நிலம் கொடுத்த செய்தியை அறிந்த ஏராளமானோர் பாஷாவை பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து பாஷா கூறும்போது, "கடவுளுக்கு சாதி, மதம், மொழி, இனம் என எதுவும் இல்லை. எனக்கு அல்லாவும் ஒன்றுதான். அனுமனும் ஒன்றுதான். அதனால்தான் என் நிலத்தை இலவசமாக கொடுத்தேன். எல்லா கடவுளும் அன்பைத்தான் போதிக்கிறார்கள். இந்துக்களும் இஸ்லாமியர்களும் சகோதரர்கள். ஆனால் ஒரு சிலர்தங்களின் சுயநலத்துக்காக கடவுளை வைத்து மக்களை பிரிக்கிறார்கள். அதை அரசியல்வாதிகள் தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிவிடுகிறார்கள்" என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in