

கரோனா நோயாளிகள் வீட்டுக்குவெளியே போஸ்டர் ஒட்டக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொடுதல் மூலம் பிறருக்கு பரவும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து,கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக்கு வெளியே தொடக்கத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. மேலும் அந்த வழியாகபோக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்த நடைமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்தவழக்கை நீதிபதி அசோக் பூஷண்தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “கரோனாதடுப்பு நடைமுறைகள் தொடர்பான விதிமுறைகளில், பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு வெளியே போஸ்டர் ஒட்டப்படும் என குறிப்பிடப்படவில்லை” என தெரிவித்தார்.
இந்த வழக்கின் விசாரணை முடிந்ததையடுத்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “கரோனா பாதித்தவர்கள் வீடுகளுக்கு வெளியே போஸ்டர் ஒட்ட வேண்டும் என மத்திய அரசின் விதிமுறைகளில் குறிப்பிடப்படவில்லை. எனவே, மாநில அரசுகள் நோயாளிகள் வீட்டுக்கு முன்பு போஸ்டர் ஒட்டவோ, குறியீடு மூலம் அடையாளப்படுத்தவோ கூடாது. இத்துடன் இந்த மனு முடித்து வைக்கப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.