ஆந்திராவில் பரவும் மர்ம நோய் தண்ணீர், பாலில் ஈயம் கலந்ததா?- எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் பரிசோதனை

ஆந்திராவில் பரவும் மர்ம நோய் தண்ணீர், பாலில் ஈயம் கலந்ததா?- எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் பரிசோதனை
Updated on
1 min read

ஆந்திராவில் மர்ம நோயால் 500-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவத்தில் தண்ணீர் மற்றும் பாலில் ஈயம் கலந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், ஏலூரு நகரில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் தொடர்ந்து 4 நாட்களாக பொதுமக்கள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வாந்தி, மயக்கம், காய்ச்சல், வலிப்பு என பாதிப்பு ஏற்பட்டு முதல் 2 நாட்களில் 530 பேர் ஏலூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் நேற்று முன்தினம் 370 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை மேலும் 80 பேர் இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 20 நோயாளிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இவர்கள் குண்டூர்,விஜயவாடா அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே டெல்லியில் இருந்து எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்கள் ஏலூரு வந்தனர். பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.

ஏலூரு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் தொட்டிகள் சுத்தப்படுத்தப்பட்டன. இவற்றில் தண்ணீர் மாதிரிகள்சேகரிக்கப்பட்டன மேலும்அப்பகுதிகளில் வினியோகிக்கப்படும் பாலின் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பரிசோதனைகளில், தண்ணீர் மற்றும் பாலில் ஈயம் போன்ற ரசாயனம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் இதுகுறித்து தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கலப்படம் எப்படி நடந்தது? இது எப்படி சாத்தியமானது என்பது குறித்து மருத்துவக் குழுவினரும் அதிகாரிகளும் ஆய்வு நடத்தி வருகின்றனர். இது தொற்று வியாதி இல்லை என்பதால் மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in