வரும் 8-ம் தேதி விவசாயிகள் நடத்தும் பாரத் பந்த்திற்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆதரவு: தொழிற்சங்களும் ஆதரவு

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் :படம் ஏஎன்ஐ
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் :படம் ஏஎன்ஐ
Updated on
1 min read


வேளாண் சட்டங்களைத் எதிர்த்து வரும் 8-ம் தேதி விவசாயிகள் அழைப்பு விடுத்த பாரத் பந்த்திற்கு தெலங்கானா முதல்வரும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவ் ஆதரவு அளித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி சலோ என்ற பெயரில் ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்கள் உள்பட பல்வேறு மாநில விவசாயிகள், விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

10-வது நாளாக தொடரும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தால், டெல்லி எல்லைப்பகுதியில் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதுவரை விவசாயிகள், மத்திய அரசுக்கு இடையே 5 சுற்றுப் பேச்சு முடிந்தபோதிலும், எந்தவிதமான சுமூகமான தீர்வும் எட்டப்படவில்லை.

இந்நிலையில் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி வரும் 8-ம் தேதி விவசாயிகள் பாரத் பந்த் அதாவது நாடுமுழுவதும் வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிஆர்எஸ் கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

“வேளாண் சட்டங்கள் விவசாயிகள் நலனுக்கு எதிரானது எனக் கூறி நாடாளுமன்றத்திலேயே டிஆர்எஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும்வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவது அவசியம்.ஆதலால் டிஆர்எஸ் கட்சியினர் அனைவரும் விவசாயிகள் போராட்டத்தை வெற்றி பெற வைக்க வேண்டும்” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தவிர 10 தொழிற்சங்கங்களும் விவசாயிகள் நடத்தும் பாரத் பந்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஐஎன்டியுசி, ஐஏடியுசி, ஹெஎம்எஸ், சிஐடியு, ஏஐயுடியுசி, டியுசிசி, எஸ்இடபிள்யுஏ, ஏஐசிசிடியு, எல்பிஎப், யுடியுசி ஆகிய அமைப்புகள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

மேலும், விவசாயிகளின் போராட்டத்துக்கு வங்கி ஊழியர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளன. அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் அமைப்பு விடுத்த அறிவிப்பில், “ விவசாயிகள், தேசத்தின் நலன் கருதி விவசாயிகளின் கோரிக்கையை அரசு பிரசீலித்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் அமைப்பு, இந்தியதேசிய அதிகாரிகள் கூட்டமைப்பு ஆகியவையும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in