

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் பாம்பனுக்கு தென்கிழக்கே 530 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றிரவு புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு புரெவி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
புரெவி புயல் குறித்து இன்று காலை 5.30 மணியளவில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இன்று அதிகாலை 2.30 மணி நிலவரப்படி புரெவி புயல் பாம்பனுக்கு தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரிக்கு கிழக்கே 700 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இப்புயல் 6 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து இன்று மாலை அல்லது இரவில் இலங்கையின் திரிகோணமலை அருகே கரையைக் கடக்கிறது.
இதனால், இலங்கையின் கிழக்குப் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்துவருகிறது. மட்டக்களப்பு, அம்பாறை பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
திரிகோணமலை அருகே கரையைக் கடந்த பின் புரெவி புயல் அதே வேகத்துடன் மேற்கே நகர்ந்து மன்னார் வளைகுடா அருகே நாளை காலை அடைகிறது.
தொடர்ந்து நாளை மறுநாள் (டிச.4) அதிகாலை குமரி - பாம்பன் இடையே தென் தமிழக கடற்கரையில் புரெவி புயல் கரையைக் கடக்கும். மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புயல் பாம்பன் - குமரி இடையே கரையைக் கடக்கும்போது மணிக்கு 95 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது.
இதனால், தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை முன்னறிவிப்பு:
தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 2,3 தேதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தெற்கு கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா மாவட்டங்களில் வரும் டிசம்பர் 3-ல் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வரும் 4-ம் தேதி வரையிலுமே மழை வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புரெவி புயல் காரணமாக ராமேசுவரத்தில் பாம்பன் துறைமுகத்தில் 7-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.