

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 94 லட்சத்தைக் கடந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 88.50 லட்சத்தை நெருங்குகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது:
''இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38 ஆயிரத்து 772 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 94 லட்சத்து 31 ஆயிரத்து 691 ஆக அதிகரித்துள்ளது. இந்த மாதத்தில் 7-வது முறையாக கரோனா வைரஸ் பாதிப்பு 40 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
இதில் ஆறுதல் தரும் வகையில் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 88 லட்சத்து 47 ஆயிரத்து 600 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 93.81 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 46 ஆயிரத்து 952 ஆக குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4.74 சதவீதமாகக் குறைந்துள்ளது. தொடர்ந்து 20-வது நாளாக, கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 443 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 139 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்பு 1.45 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக டெல்லியில் 68 பேரும், மகாராஷ்டிராவில் 85 பேரும், மேற்கு வங்கத்தில் 54 பேரும், உ.பி.யில் 24 பேரும், கேரளாவில் 27 பேரும், ஹரியாணாவில் 26 பேரும் உயிரிழந்தனர்.
ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 14 கோடியே 3 லட்சத்து 79 ஆயிரத்து 976 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 8 லட்சத்து 76 ஆயிரத்து 173 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும் எட்டியது.
செப்டம்பர் 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11-ம் தேதி 70 லட்சத்தையும் தொட்டது. 29-ம் தேதி 80 லட்சத்தையும், நவம்பர் 20-ம் தேதி 90 லட்சத்தையும் கடந்துள்ளது''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.