

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தாவர்சந்த் கெலாட், திருநங்கைகளுக்கான தேசிய இணையதளத்தையும், குஜராத்தின் வதோதராவில் திருநங்கைகளுக்கான விடுதியையும் காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர்கள் கிருஷன் பால் குர்ஜர், ராம்தாஸ் அத்வாலே, ரத்தன் லால் கட்டாரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தாவர்சந்த் கெலாட், இந்த புதிய இணையதளத்தின் வாயிலாக திருநங்கைகள், சான்றுகள் மற்றும் அடையாள அட்டைகளுக்கு டிஜிட்டல் முறையில் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் சுலபமாக விண்ணப்பிக்கலாம் என்று கூறினார்.
விண்ணப்பங்கள் அனைத்தும் உரிய நேரத்தில் சரி பார்க்கப்பட்டு காலதாமதமின்றி வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்களை டிஜிட்டல் முறையிலேயே தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றார் அவர்.