

பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து முன்னாள் ராணுவ வீரர் தேஜ் பகதூர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.அர்விந்த் போப்டே தலைமையிலான அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கடந்த 2017-ம் ஆண்டு சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலானது. அதில் அப்போது எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றிக் கொண்டிருந்த வீரர் தேஜ் பகதூர், ராணுவத்தில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும் மிகக் குறைவான அளவில் உணவு வழங்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பின்னர் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலின் போது பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட்ட மோடியை எதிர்த்து சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட தேஜ் பகதூர் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால், அவருடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
தேஜ்பகதூர் வேட்புமனுத் தாக்கலின்போது, மனுவை பரிசீலித்த தேர்தல் அதிகாரி மனுவை தள்ளுபடி செய்தார். அந்த மனுவில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி தேஜ்பகதூர் ஊழலால் பதவி நீக்கம் செய்யப்படவில்லை அல்லது ஒழுக்கக்குறைவால் பதவி நீக்கம் செய்யப்படவில்லை எனும் சான்றிதழ் இணைக்கத் தவறிவிட்டதால் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.
தேர்தல் அதிகாரி முடிவை எதிர்த்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தை தேஜ் பகதூர் நாடினார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் தேஜ் பகதூர் வாரணாசியில் ஓட்டுரிமை கொண்டவர் இல்லை எனக் கூறி 2019-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து தேஜ் பகதூர் உச்சநீதிமன்றத்தை நாடினார். இந்த உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. பிரதமர் தரப்பில் ஹரிஷ் சால்வே ஆஜராகி வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.
இந்நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேஜ் பகதூர் வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு சரியானதே எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.