

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கடந்த பிப்ரவரி மாதம் வடகிழக்கு டெல்லி பகுதியில் பயங்கர கலவரம் வெடித்தது. பல நாட்கள் நடைபெற்ற இந்த கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும், கடைகள், ஏராளமான வாகனங்கள், வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இந்தக் கலவரம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து கடந்த செப்டம்பர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
அதில், ஜேஎன்யு முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித், காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் இஷ்ரத் ஜகான், ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசைன் உட்பட பலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 930 பக்கங்கள் கொண்ட துணை குற்றப்பத்திரிகையை டெல்லி நீதிமன்றத்தில் போலீஸார் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்தனர். அதில் கூறியிருப்பதாவது:
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியாவுக்கு வருகை தந்தார். அவரது வருகையின்போது, டெல்லியில் மிகப்பெரிய கலவரத்தைத் தூண்டி விட்டு, இந்தியாவில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவது போன்ற ஒரு காட்சியை உலகளவில் பரப்ப வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டுள்ளனர். இதற்காக டெல்லியில் நடைபெற்ற கலவரத்தை மிகப்பெரிய அளவில் தூண்டி விடுவதற்காக ஜேஎன்யு முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் மற்றும் ஷர்ஜில் இமாம் ஆகியோர் சதித் திட்டம் தீட்டி கொடுத்துள்ளனர். கலவரத்தைப் பெரிய அளவில் தூண்டிவிடுவது குறித்து மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் டெல்லி சாந்த் பாக் பகுதியில் உள்ள அலுவலகத்தில் உமர் காலித் ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளார்.
ஆயுதங்கள் சேகரிப்பு
கலவரத்தின் போது பயன்படுத்த வெடிபொருட்கள், பெட்ரோல் குண்டுகள், ஆசிட் பாட்டில்கள், கற்களை காலித் உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல்வேறு வீடுகளில் சேகரித்து வைத்துள்ளனர். இந்தக் கலவரம் முன்கூட்டியே நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு துணை குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
துணை குற்றப்பத்திரிகை டெல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அமிதாப் ராவத் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டது. அவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம், கிரிமினல் சதி, கொலை, கலவரம், தேச துரோகம், சட்டவிரோதமாக கூடுதல், மதம், மொழி, ஜாதியின் அடிப்படையில் விரோதத்தை வளர்ப்பது போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.