

கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகோய் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அம்மாநில சுகாதார அமைச்சர் ஹேமந்த் பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் அசாம் மாநில முன்னாள் முதல்வருமான தருண் கோகோய்க்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் அவர் வீடு திரும்பினார்.
மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கரோனா பிந்தைய பாதிப்பு நுரையீரல் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகளிலும் பிரச்சினை ஏற்பட்டது. கடந்த 21-ம் தேதி செயற்கை சுவாசக் கருவியில் வைக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு உறுப்புகளும் செயலிழந்துள்ளது.
குவாஹாட்டி அரசு மருத்துவமனையில் 2-வது முறையாக அனுமதிக்கப்பட்டுள்ள கோகோய்க்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை வழங்கி வருகின்றனர்.
இது குறித்து குவாஹாட்டி அரசு மருத்துவமனை காவல் கண்காணிப்பாளர் அபிஜித் சர்மா கூறும்போதும் "இன்று காலையில் தருண் கோகோய் உடல் நிலையைப் பரிசோதித்தோம். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு டயாலிஸிஸ் செய்ய முயற்சித்து வருகிறோம்" என்றார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அசாம் சுகாதார அமைச்சரும் தருணின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதை உறுதி செய்திருக்கிறார்.
கரோனா பாதிப்பு குறித்து டெல்லி, குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களுடன் சேர்ந்து அசாம் மாநிலமும் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.