செல்போனில் இன்டர்நெட் தீர்ந்துபோனதால் தம்பி குத்திக்கொலை: ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

செல்போனில் இன்டர்நெட் தீர்ந்துபோனதால் தம்பியை அண்ணனே கத்தியால் குத்திக் கொலை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.

செல்போன் மோகத்தில் அதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் அதனைப் பயன்படுத்தும்போது மனித உறவுகளில் ஏற்படும் சிக்கல்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

ராஜஸ்தானில் ஒருவர், செல்போன் பயன்பாட்டில் இன்டர்நெட் தீர்ந்துபோனதன் காரணமாக சொந்தத் தம்பியையே குத்திக் கொலை செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஜோத்பூர் சரக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

''ராய் என்பவர் தனது அண்ணன் ராமன் என்பவரின் செல்போனை புதன்கிழமை பயன்படுத்தியுள்ளார். பின்னர் அதனைத் திருப்பிக் கொடுத்துள்ளார். செல்போனைப் பயன்படுத்த முயன்ற ராமன் செல்போனில் இன்டர்நெட் இல்லாததைக் கண்டு கோபமடைந்தார்.

தனது தம்பி ராயை வீட்டின் மாடிக்கு அழைத்துச் சென்று, அவரைத் திட்டினார். பின்னர் ஆத்திரமடைந்த நிலையில், ராயைக் கத்தியால் குத்தி அங்கிருந்து தப்பிவிட்டார்.

இச்சம்பவம் வீட்டில் உள்ளவர்களுக்குத் தாமதமாகத்தான் தெரியவந்துள்ளது. வீட்டின் மாடிப்பகுதியில் ராய் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே ராய் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் ராய் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

தனது தம்பியைக் குத்திய பின்னர் தப்பி ஓடிய ராமன் வெள்ளிக்கிழமை ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார்''.

இவ்வாறு காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in