உத்தரப் பிரதேசத்தில் பயங்கர சாலை விபத்து: 6 குழந்தைகள் உட்பட 14 பேர் பலி- திருமண நிகழ்வுக்குச் சென்று திரும்பியபோது சோகம்

உத்தரப் பிரதேசத்தில் பயங்கர சாலை விபத்து: 6 குழந்தைகள் உட்பட 14 பேர் பலி- திருமண நிகழ்வுக்குச் சென்று திரும்பியபோது சோகம்
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில் வியாழன் பின்னிரவில் ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் 6 குழந்தைகள் உட்பட 14 பேர் பலியாகினர். திருமண நிகழ்வுக்குச் சென்று திரும்பியபோது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

இது குறித்து உத்தரப் பிரதேச மாநில பிரதாப்கர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனுராக் ஆர்யா கூறியதாவது:

குண்டா கிராமத்தில் நடந்த திருமண நிகழ்வுக்குச் சென்றுவிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் ஒரு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

பிரதாப்கர் அருகே வாகனம் வந்தபோது சக்கரம்பழுதாகி சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் லாரியின் பின்புறம் கார் மோதியுள்ளது. இதில் காரில் இருந்த 6 குழந்தைகள் உட்பட 14 பேர் பரிதாபமாக இறந்தனர். கார் முற்றிலும் சேதமடைந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்தவர்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. விரைவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.

இவ்வாறு காவல் கண்காணிப்பாளர் கூறினார்.

திருமண நிகழ்வுக்குச் சென்று மகிழ்ச்சியாகத் திரும்பிய 14 பேர் சாலை விபத்தில் இறந்த சம்பவம் அவர்களின் உறவினர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உ.பி. முதல்வர் இரங்கல்:

சாலை விபத்தில் 14 பேர் இறந்த சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் விரைந்து சென்று பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு உரிய உதவிகளைச் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in