பட்டாசு வெடிப்பதை விமர்சித்த ‌கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம்

பட்டாசு வெடிப்பதை விமர்சித்த ‌கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம்
Updated on
1 min read

கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பல்வேறு மாநிலங்களில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் எழுந்த நிலையில், கர்நாடக உள்துறை செயலர் ரூபா ஐபிஎஸ் தனது பேஸ்புக் பக்கத்தில், "பட்டாசு வெடிப்பது இந்து மத வழக்கம் கிடையாது. இதை சொல்வதால் இந்து மதத்தை தாக்கிப் பேசுவதாக கூறுபவர்கள், புராணங்களிலும் வேதங்களிலும் பட்டாசு வெடிப்பது பற்றி எந்த பதிவும் இல்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஐரோப்பியர்கள் மூலமாக தான் இந்தியாவுக்கு பட்டாசு அறிமுகமானது" என்று எழுதியிருந்தார்.

இதற்கு 'ட்ரூ இந்தாலஜி' என்ற ட்விட்டர் பக்கத்தில், 'பண்டைய வேதங்களில் பட்டாசு குறித்து ஏராளமான ஆதாரங்கள் இருக்
கின்றன' என சில ஆதாரங்களுடன் ரூபாவுக்கு பதிலளிக்கப்பட்டது. இந்நிலையில் 'ட்ரூ இந்தாலஜி' ட்விட்டர் பக்கம் திடீரென முட‌க்கப்பட்டது. ஐபிஎஸ் அதிகாரி ரூபாவின் புகாரின் பேரில்தான் இந்த ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இதைய‌டுத்து நடிகை கங்கனா ரனாவத் உட்பட ஏராளமானோர் இந்து மதத்தினருக்கு ரூபா அறிவுரை கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கருத்து சுதந்திரத்தை பறிக்க கூடாது எனவும் கருத்து தெரிவித்தனர். மேலும் 'ட்ரூ இந்தாலஜி' ட்விட்டர் கணக்கை விடுவிக்க 1.84 லட்சம் பேர் #BringBackTrueIndology , #ShameOnYouIPSRoopa என்ற 2 ஹேஸ்டேக் மூலமும் கருத்து தெரிவித்ததால் ட்விட்டரில் டிரெண்டானது.

இதற்கு ரூபா, “ட்விட்டருக்கு அப்பால் ஒரு வாழ்க்கை இருக்கிறது. சட்டங்களை மதிப்பது அரசு அதிகாரிக்கு முக்கியம். நீதிமன்றம் மூலமாக நீங்கள் சட்டங்களை கேள்வி கேட்கலாம். ட்விட்டரில் அதை கேட்க முடியாது. அரசியலமைப்பால் கட்டமைக்கப்பட்ட ஜனநாயகத்தின் 3 தூண்களுக்கு மரியாதை செலுத்துங்கள். அரசின் முடிவைப் பற்றி பேசிய அதிகாரியை மவுனமாக்க முயற்சிக்கிறீர்கள். அரசின் உத்தரவைப் பின்பற்ற வேண்டாம் என்று நான் சொல்வேன் என்று எதிர்பார்க்கிறீர்களா? மன்னிக்கவும். ஒரு போதும் அது நடக்காது ”என்று ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in