

திருமணத்துக்காக மதம் மாறுவது செல்லாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை சுட்டிக் காட்டியுள்ள உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், லவ் ஜிகாத்தை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று ஏற்கெனவே உறுதி அளித்துள்ளார்.
உத்தர பிரதேசம் மட்டுமன்றி பாஜக ஆளும் ஹரியாணா, கர்நாடகாவிலும் இதுபோன்ற சட்டத்தை இயற்ற முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வரிசையில் பாஜக ஆளும் மத்திய பிரதேசத்திலும் லவ் ஜிகாத்தை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இதுகுறித்து மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா போபாலில் நேற்று கூறியதாவது:
லவ் ஜிகாத் மூலம் கட்டாய மதமாற்றம் நடைபெற்று வருகிறது. இதை தடுக்க அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் புதிய சட்டத்தை இயற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்டத்தின்படி குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் சட்டப்பிரிவுகள் வரையறுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.