தாத்ரி போன்ற சிறு சம்பவங்களால் தேச ஒற்றுமை பாதிக்காது: மோகன் பாகவத்

தாத்ரி போன்ற சிறு சம்பவங்களால் தேச ஒற்றுமை பாதிக்காது: மோகன் பாகவத்
Updated on
2 min read

'தாத்ரியில் நடந்தது போன்ற சிறிய சம்பவங்களால் இந்திய ஒற்றுமையை சீர்குலைக்க முடியாது' என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தின் பேச்சு, அரசின் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. இந்த ஆண்டில், அவரது உரை தூர்தர்ஷனில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது இது இரண்டாவது முறையாகும்.

தசரா பண்டிகையை ஒட்டி நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மத்தியில் 55 நிமிடங்களுக்கு நீண்ட உரையாற்றிய மோகன் பாகவத், "தாத்ரியில் நடந்தது சிறிய சம்பவம். ஆனால், அது மிகைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சிறு சம்பவங்களால் இந்துக் கலாச்சாரத்தையோ அல்லது நாட்டின் ஒற்றுமையையோ சீர்குலைக்க முடியாது.

காலங்காலமாக இந்துக் கலாச்சாரம், இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒருங்கிணைத்து, ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தி வருகிறது. இதுவே இந்துத்துவாவின் சாராம்சமும் கூட.

நமது தேசம் இப்போதுபோல் எப்போதுமே ஒன்றுபட்டு இருக்கும். இந்துத்துவா கொள்கையின் அடிப்படையில் நாட்டின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தும் பணியை சங் பரிவார் அமைப்பு கடந்த 90 ஆண்டுகளாக சிறப்பாக செய்து வருகிறது.

இந்திய சமூகத்தை ஒருங்கிணைப்பதில் ஆர்.எஸ்.எஸ். மூன்று அடிப்படை நம்பிக்கைகளை பின்பற்றியிருக்கிறது. அவை இந்து கலாச்சாரம், இந்து சமய மூதாதையர்கள், இந்து நிலம். சமூகத்தை ஒருங்கிணைக்கும் இந்த நம்பிக்கைகள் நிலைநாட்டப்பட வேண்டும். அதுவே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இலக்கு.

நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்த தேசத்தை விரக்தி போக்கில் இருந்து மீட்டெடுத்துள்ளது. நாட்டில் நம்பிக்கை விதைக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச அரங்கில் இந்தியா உயர்ந்து நிற்க வழி செய்துள்ளது.

ஆனால், இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டின் நிலைமை கவலைக்குரியதாக இருந்தது. மோடி ஆட்சியில் அமல்படுத்தப்பட்டுள்ள ஸ்வச் பாரத், முத்ரா வங்கி திட்டம், ஜன்தன் யோஜனா, காஸ் மானியத்தை திருப்பி அளிக்கும் திட்டம் ஆகியன நல்லதொரு ஏற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இருப்பினும், பள்ளத்தில் சரிந்திருந்த இந்தியப் பொருளாதாரத்தை மேலும் வலுவடையச் செய்ய இன்னும் சில காலம் தேவைப்படுகிறது.

நேபாள இயற்கை பேரிடரின்போது மீட்புப் பணியில் உதவியது, மாலத்தீவில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது நிலைமையை சமாளிக்க உதவிக்கரம் நீட்டியது, ஏமனில் சிக்கிய இந்தியர்களை பத்திரமாக தாயகம் திருப்பி அழைத்து வந்தவது என இந்திய அரசின் பணிகள் பல பாரட்டுக்குரிய விதத்தில் அமைந்துள்ளன.

இந்திய பாரம்பரிய அடையாளங்களான யோகா, கீதை, தத்தாகட் ஆகியன இன்று உலகளவில் பிரபலமடைந்துள்ளன. இது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

அதேவேளையில், நாட்டின் அனைத்து மக்களையும் சமமாக நடத்தும் வகையிலான மக்கள்தொகை கொள்கையை உருவாக்குவது அவசியம். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் நடைபெற்றுள்ளன. மக்கள்தொகை அதிகரித்தால் நாட்டின் சுமை அதிகரிக்கும். மக்கள்தொகை ஒரு வகையில் வளம் என்பதை மறுப்பதற்கில்லை; ஆனால் அதை சரியாக திட்டமிடுதல் வேண்டும். அடுத்த 50 ஆண்டுகளுக்கான மக்கள்தொகை கொள்கையை வகுத்துக் கொள்வது அவசியம். மக்களின் கல்வி, சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இக்கொள்கை அமைக்கப்பட வேண்டும்.

பாகிஸ்தான், சீனா நாடுகளால் இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுகிறது. அதேபோல், இந்திய இளைஞர்கள் சிலர் ஐ.எஸ். கொள்கைகளால் ஈர்க்கப்படுகின்றனர். இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

சாமானிய மக்களுக்கும் கல்வி கிடைக்கும் வகையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். கல்வியை வியாபாரமாக்கும் போக்கு தடுக்கப்பட வேண்டும். தனிமனிதனின் வயிற்றுப் பசியை போக்குவதற்கு மட்டுமல்ல கல்வி. சமூகத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும். கல்வி, நன்மதிப்புகளையும், சமூக சிந்தனையையும் ஊக்குவிப்பதாக அமைய வேண்டும்.

வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்தினால் மட்டும் போதாது. அத்திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படுகின்றனவா என்பதும் கண்காணிப்பட வேண்டும். இதற்கு அரசு, அரசு நிர்வாகம், சமூகமும் ஒன்றுபட்டு இயங்க வேண்டும். அரசு கொள்கைகளை வகுத்துத் தந்தால் அதை நாம் அனைவரும் இணைந்து செயல்படுத்திட வேண்டும்.

கல்வித் துறை, நிர்வாகத் துறை போல் தேர்தல் முறைகளிலும் சீர்திருத்தங்கள் தேவைப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் சமூகத்திற்கு உண்மையானவர்களாக இருக்க வேண்டும்.

வரிவிதிப்பு முறைகளை எளிமைப்படுத்த வேண்டும். மக்களின் பொது சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.

தேசம் தானாகவே முன்னேற முடியாது. அதற்கு மக்களின் பங்களிப்பு தேவை. தேச முன்னேற்றத்தை கட்டமைப்பதில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும். மற்றவர்களும் இப்பணியில் இணைந்து கொள்ள வேண்டும்.

இந்தியக் கலாச்சாரம் அனைவரையும் சமமாக ஏற்றுக் கொள்ளும் கலாச்சாரம். வேற்றுமையில் ஒற்றுமையைப் பேணும் கலாச்சாரம். இந்தியக் கலாச்சாரமே இந்துக் கலாச்சாரமும் ஆகும்" என்றார் மோகன் பாகவத்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in