இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 84 லட்சத்தைக் கடந்தது; குணமடைந்தோர் எண்ணிக்கை 77.50 லட்சத்துக்கும் மேல் உயர்வு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 84 லட்சத்தைக் கடந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 77.65 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் புதிதாக 47 ஆயிரத்து 638 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்தப் பாதிப்பு 84 லட்சத்து 11 ஆயிரத்து 724 ஆக அதிகரித்துள்ளது.

இதில் ஆறுதல் தரும் வகையில் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 77 லட்சத்து 65 ஆயிரத்து 966 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 92.32 ஆக உயர்ந்துள்ளது

கரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்து 20 ஆயிரத்து 733 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்தப் பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6.19 சதவீதமாகக் குறைந்துள்ளது.

தொடர்ந்து 8-வது நாளாக, கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 670 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 985 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்பு 1.49 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 256 பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்கத்தில் 54 பேர், டெல்லியில் 66 பேர், சத்தீஸ்கரில் 44 பேர், தமிழகத்தில் 28 பேர், கர்நாடகாவில் 31 பேர், உத்தரப் பிரதேசத்தில் 27 பேர், கேரளாவில் 26 பேர் உயிரிழந்தனர்.

ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 11 கோடியே 54 லட்சத்து 29 ஆயிரத்து 95 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 12 லட்சத்து 20 ஆயிரத்து 711 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும் எட்டியது. செப்டம்பர் 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11-ம் தேதி 70 லட்சத்தையும் தொட்டது. 29-ம் தேதி 80 லட்சத்தைக் கடந்துள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in