‘‘ஆம் நான் நாய் தான்’’- கமல்நாத்துக்கு ஜோதிராதித்ய சிந்தியா பதிலடி
கமல்நாத் என்னை நாய் என்று கூறுகிறார், ஆம் நான் நாய் தான் என பாஜக மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா பதிலடி கொடுத்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 3-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இங்குள்ள தாப்ரா தொகுதியில் போட்டியிடும் மாநில அமைச்சரும், பாஜக வேட்பாளருமான இமர்தி தேவி குறித்து கமல்நாத் அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து கமல்நாத்தின் கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில், கட்சிப் பொறுப்புகளில் இருந்து கமல்நாத்தை நீக்க வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு, ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடிதம் எழுதினார். இதனிடையே, இந்த விவகாரத்தில் 48 மணி நேரத்தில் விளக்கமளிக்க வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையம் கமல்நாத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் கமல்நாத் மீது மீண்டும் ஒரு சர்ச்சை எழும்பியுள்ளது.
இந்த தேர்தல் நடந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஜோதிராதித்ய சிந்தியா பேசினார். அவர் கூறியதாவது:
ம.பி. இடைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் கமல்நாத் என்னை நாய் என்று கூறுகிறார். ஆம் நான் நாய் தான் ஏனென்றால் நான் மக்களின் சேவகன்.
நாய் அதன் உரிமையாளர்களை பாதுகாக்கிறது. மக்களின் காவலனான நான் மக்களுக்கு எதிராக செயல்படுவோரை நாயாக தாக்குவேன்.’’ எனக் கூறினார்.
