இலங்கை ராணுவத்துக்கு இந்தியப் பயிற்சி தொடரும்: ரணில் உடனான கூட்டுப் பேட்டியில் மோடி அறிவிப்பு

இலங்கை ராணுவத்துக்கு இந்தியப் பயிற்சி தொடரும்: ரணில் உடனான கூட்டுப் பேட்டியில் மோடி அறிவிப்பு
Updated on
2 min read

ராணுவப் பயிற்சியில் இந்தியாவின் மிக நெருங்கிய நட்பு நாடாக இலங்கை திகழ்கிறது என்றும், அந்நாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து இந்தியா பாதுகாப்பு துறைசார் பயிற்சி வழங்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே. இன்று (செவ்வாய்கிழமை) காலை வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்த அவர், பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் இருநாட்டு பிரதமர்களும் பத்திரிகையாளர்களை கூட்டாக சந்தித்தனர்.

அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இலங்கை பிரதமரையும் அவருடன் வந்திருக்கும் குழுவினரையும் இந்தியாவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இலங்கை தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே வெற்றி பெற்றமைக்கு எனது வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

அவர், பிரதமராக பதவியேற்ற பின்னர் முதல் வெளிநாட்டுப் பயணத்துக்கு இந்தியாவை தேர்வு செய்ததில் பெருமிதம் கொள்கிறேன். ரணில் முதல்முறையாக இலங்கை பிரதமராக முழுமையான பதவிக்காலம் வகித்தபோது இந்தியாவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியே இருந்தது. இப்போது அவர் மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இப்போது அவர் மீண்டும் பிரதமராகியுள்ளார். இங்கு, (இந்தியாவில்) தே.ஜ.கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.

வரலாற்றுச் சிறப்பு:

இந்திய - இலங்கை உறவில் இந்த ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்கது. முதலில் இலங்கை அதிபர் சிறிசேனா பதவியேற்புக்கு பின்னர் தனது முதல் வெளிநாட்டுப்பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொண்டார். பின்னர், நான் இலங்கை சென்றேன். தற்போது, இலங்கை பிரதமர் ரணில் இந்தியாவுக்கு தனது முதல் வெளிநாட்டுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

வலுவான நட்புறவு:

இந்தியா - இலங்கை நட்புறவு மிகவும் வலுவானது. இலங்கையில் அண்மையில் நடைபெற்ற தேர்தல்கள் அந்நாடு அமைதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய கொள்கைகளுடன் வளமான எதிர்காலத்தை நோக்கி நகர்ந்துவருகிறது என்பதை உணர்த்துகிறது. இலங்கை அரசு அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற வாழ்த்துவதோடு, இந்தியாவின் ஆதரவு எப்போதும் இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இலங்கை தலைவர்களின் சீர்தூக்கிய அறிவாலும், அவர்களது உயரிய எண்ணங்களாலும் அந்நாட்டில் உண்மையான அமைதி உடன்படிக்கை ஏற்படுவதுடன் வளர்ச்சியும் ஏற்படும் என நம்புகிறோம்.

இலங்கையின் வளர்ச்சி தெற்காசிய பிராந்திய வளர்ச்சிக்கு வித்திடுவதோடு, இந்தியா - இலங்கை கடல்சார் நட்புறவுக்கும் வித்திடும்.

ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை:

இருநாட்டு நட்புறவு குறித்து எங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமானதாக அமைந்தது. பொருளாதார உடன்படிக்கைகள் மேலும் வலுப்பெறும் என்ற நம்பிக்கை உதயமாகியுள்ளது. இலங்கையில் கட்டுமானம், எரிசக்தி, போக்குவரத்து துறையில் முதலீடு செய்ய விரும்பும் இந்திய முதலீட்டாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என இலங்கை பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன்.

அதேபோல், இலங்கையின் உட்கட்டுமானம், ரயில்வே, எரிசக்தி, சமூக மேம்பாட்டு திட்டங்கள், விவசாயம், அறிவியல் தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி ஆகிய துறைகளில் இந்தியாவின் நட்புறவு தொடரும்.

இருநாட்டு மக்கள் நட்புறவை மதிக்கிறோம். இனி குமார சங்ககாராவை கிரிக்கெட் மைதானத்தில் காண முடியாது என்பதுகூட எங்களுக்கு வருத்தமளிக்கும் செய்தியே.

வீரர்களுக்கு பயிற்சி தொடரும்:

பாதுகாப்பு பயிற்சித் துறையில் இலங்கை, இந்தியாவின் மிக நெருங்கிய நட்பு நாடாக திகழ்கிறது அந்தவகையில் இலங்கை வீரர்களுக்கு தொடர்ந்து இந்தியா பாதுகாப்பு துறைசார் பயிற்சி வழங்கும். இந்தியா - இலங்கை பாதுகாப்பு துறை ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும். தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இந்தியா இலங்கை கூட்டுறவு தீவிரப்படுத்தப்படும். கடல் எல்லையில் இருநாட்டு பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும்.

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு:

இலங்கை, இந்திய மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை மூலம் தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்பதில் நாங்கள் இருவரும் உடன்படுகிறோம். மேலும், மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகவேண்டும் என இலங்கை பிரதமரிடம் வலியுறுத்தினேன். ஏனெனில், இது அவர்கள் வாழ்வாதார பிரச்சினை. அதேவேளையில், இந்திய மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு தயாராகும்படி ஊக்குவித்து வருவதாகவும் ரணிலிடம் கூறினேன்"

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in