ஹாத்தரஸ் பலாத்காரக் கொலை சம்பவத்தைப் பயன்படுத்தி சாதிக் கலவரத்தைத் தூண்ட சதித் திட்டம்: புதிய இணையதளத்தைக் கண்டுபிடித்த உ.பி. போலீஸார் 

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் : கோப்புப்படம்
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் : கோப்புப்படம்
Updated on
2 min read

உத்தரப் பிரதேசம் ஹாத்தரஸ் சம்பவத்தைப் பயன்படுத்தி மாநிலத்தில் சாதிக் கலவரத்தைத் தூண்டிவிட்டு, மாநில அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக உ.பி.போலீஸார் கண்டறிந்துள்ளனர்.

இதற்காக ஹாத்தரஸ் பெயரைப் பயன்படுத்தி ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதையும் போலீஸார் கண்டறிந்துள்ளனர்.

ஹாத்தரஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். அவரின் உடலுக்கு பெற்றோர் இறுதிச்சடங்குகூட செய்யவிடாமல் போலீஸார் வலுக்கட்டாயமாக பெட்ரோல் ஊற்றித் தகனம் செய்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பாகி பல்வேறு மாநிலங்களி்ல் போராட்டம் நடந்து வருகிறது.

காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் இந்தச் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றன. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கடந்த வியாழக்கிழமை போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டனர். பின்னர் சனிக்கிழமை மீண்டும் செல்ல முயன்றபோது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள்.

ஹாத்தரஸ் சம்பவத்தில் கொல்லப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி உ.பி.யில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்தக் கொலை தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையை அமைத்துள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், சிபிஐ விசாரணைக்கும் பரிந்துரை செய்துள்ளார்.

இந்நிலையில் justiceforhathrasvictim.carrd.co என்ற பெயரில் ஒரு இணையதளத்தை யாரோ சிலர் உருவாக்கியுள்ளனர். இந்த இணையதளம் மூலம் ஹாத்தரஸ் சம்பவத்துக்காக எவ்வாறு போராட வேண்டும், போலீஸாருடன் மோதலைத் தவிர்ப்பது எப்படி என்பன உள்ளிட்ட பல்வேறு முறைகளையும் தெரிவித்து, அதில் இணையவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கலவரத்தின்போது பாதுகாப்பாக இருப்பது, கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டால் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது, செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை எனப் பல விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த இணையதளம் தொடங்கப்பட்டவுடன் சில மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான நபர்கள் போலியான முகவரிகளைக் கொடுத்து இதில் இணைந்துள்ளனர். மேலும், டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஹாத்தரஸ் சம்பவத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளம் கண்டுபிடிக்கப்பட்டபின் அதன் செயல்பாட்டை உ.பி. போலீஸாரின் தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் நிறுத்தி வைத்தனர். மேலும், இந்த இணையதளத்தில் பல்வேறு போலிச் செய்திகள், புகைப்படங்கள் இருப்பதையும் போலீஸார் கண்டுபிடித்து மீட்டுள்ளனர். இந்த இணையதளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஐபிசி ஐடி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உ.பி. அரசின் முக்கிய அதிகாரிகள் சிலர் கூறுகையில், “இந்த இணையதளத்துக்கு முஸ்லிம் நாடுகளில் இருந்தும், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பிலிருந்தும் ஏராளமான நிதியுதவி கிடைத்துள்ளது கண்டறியப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ கட்சிகளுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in