Published : 11 Sep 2015 09:19 AM
Last Updated : 11 Sep 2015 09:19 AM
அரசு தடையை மீறி இறைச்சி விற்க சிவசேனா மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் கட்சியினர் மும்பையில் பல இடங்களில் ஸ்டால் போட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் ஜெயின் சமூகத்தினர் உண்ணாவிரத நோன்பு இருந்து பண்டிகை கொண்டாட உள்ளனர். செப்டம்பர் 10, 13, 17, 18 ஆகிய தேதிகளில் பண்டிகை நடக்கிறது. இந்த 4 நாட்களில் இறைச்சி, மீன் விற்க கிரேட்டர் மும்பை மாநகராட்சி தடை விதித்தது. மிராபதயாந்தர், நவி மும்பை மாநகராட்சிகளும் தடை விதித் துள்ளன. மேலும் இறைச்சி விற்கும் இடங்களில் தடை ஆணை ஒட்டப்பட்டது. இதற்கு மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக. கூட்டணியில் உள்ள சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், மகாராஷ்டிரா நவநிர் மாண் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மாநகராட்சி தடையை மீறி இறைச்சி விற்க இரு கட்சிகளும் பரபரப்பான தாதர் பகுதியில் கடைகள் போட்டுள்ளன. ராஜ் தாக்கரே தலைமையிலான எம்என்எஸ் கட்சி தொண்டர்கள் கோழிக்கறி விற்பனைக்கான கடைகளை பல இடங்களில் திறந்துள்ளனர். மாநகராட்சி ஒட்டியிருந்த தடை ஆணையை சிவசேனா தொண்டர்கள் கிழித்தெறிந்தனர். இரு கட்சி தொண்டர்களும் மும்பையின் பல தெருக்களில் நேற்று போராட்டங்கள் நடத்தினர்.
வரும் 2017-ம் ஆண்டு மாநகராட்சி தேர்தல் நடை பெறுகிறது. அப்போது ஜெயின் சமூகத்தினரின் ஓட்டுகளை பெற பாஜக அரசு திட்டமிட்டு இறைச்சி விற்க தடை விதித்துள்ளது என்று சிவசேனா, எம்என்எஸ், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனினும், தடை உத்தரவு சரியான நடவடிக்கையே என்று பாஜக கூறிவருகிறது.
இதுகுறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியபோது, ‘‘இறைச்சி விற்பனைக்கு தடை இல்லாமல் பார்த்து கொள்ளப்படும்’’ என்று உறுதி அளித்துள்ளார். போராட்டத்தில் பங்கேற்ற எம்என்எஸ் மூத்த தலைவர் சந்தீப் தேஷ்பாண்டே கூறுகையில், ‘‘சிவசேனா தொண்டர்களுடன் சேர்ந்து தாதர் பகுதியில் நாங்கள் இறைச்சி விற்பனை செய்கிறோம். திடீரென போலீஸார் வந்து கடைகளை மூடச் சொல்லி நிர்பந்தப்படுத்தினர். அதன்பிறகு எங்களை கைது செய்தனர். இறைச்சி விற்பனைக்கான தடையை ரத்து செய்யும்வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT