

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 8,86,33,305 வேலைகள் கொடுக்கப்பட்டதாக மத்திய ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
மத்திய ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ஊரக பகுதிகளில் உள்ள ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தது 100 வேலை நாட்களுக்கான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
இத்திட்டத்தில், கடந்த மார்ச் முதல் செப்டம்பர் 17ம் தேதி வரை, 8,88,42,531 வேலைகள் கோரப்பட்டன. 8,86,33,305 வேலைகள் வழங்கப்பட்டன. இதன் அளவு 99.8%. 7,47,01,130 வேலைகள் உருவாக்கப்பட்டன. இதன் அளவு 84%.
பண்ணை மற்றும் பண்ணை சாரா தொழில்கள் மூலம் கிராமங்களில் வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதார திட்டங்களை விரிவுபடுத்துவதில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உதவி வருகிறது. மத்திய ஊரக மேம்பாடு அமைச்சகத்தின் கீழ், தீன்தயாள் அந்தியோதயா திட்டத்தின் தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ஆகியவை நேரடி வாழ்வாதாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன.
மகிளா கிசான் சாசக்திகரன் பரியோஜனா திட்டத்தில் 2,39,820 பேர் வேளாண் சூழலியல் நடைமுறைகள் (AEP) மற்றும் நிலையான கால்நடை நடைமுறைகள் ஆகியவற்றில் பயிற்சி பெற்றுள்ளனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட பண்ணை வாழ்வாதார திட்டத்தின் கீழ் 12,522 பெண்கள் பயனடைகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.