கரோனா பரவல் அதிகரிப்பு: இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபிய அரசு தடை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இந்தியாவுக்குப் பயணிகள் விமானங்களை இயக்கவும், இந்தியாவிலிருந்து விமானங்கள் வரவும் சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 56 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 90 ஆயிரம் பேர் கரோனாவில் உயிரிழந்துள்ளனர். 45 லட்சம் பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் சவுதி அரேபிய அரசின், சவுதி அரேபியப் பயணிகள் விமானப் போக்குவரத்து ஆணையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “இந்தியா, பிரேசில், அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் விமானம் சவுதி அரேபியாவுக்கு இயக்கவும், சவுதி அரேபியாவிலிருந்து இந்த 3 நாடுகளுக்குப் பயணிகள் விமானத்தை இயக்கவும் தடை செய்யப்படுகிறது. இந்த நாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களுக்கு முன் எந்த பயணியாவது வந்திருந்தால் அவர்கள் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.


அதேசமயம், அரசின் அழைப்பின் பெயரில், அலுவல்ரீதியாக வருவோருக்கு இந்தத் தடை உத்தரவு பொருந்தாது. இந்தத் தடை உத்தரவு அனைத்து விமான நிறுவனங்களுக்கும், சவுதி அரேபியாலிருந்து இயக்கப்படும் தனியார் விமானங்களுக்கும் பொருந்தும்.

கடந்த 5 நாட்களுக்கு முன், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்துக்கு 24 மணிநேரம் தடை விதித்து துபாய் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி, ஆகஸ்ட் 28, செப்டம்பர் 4-ம் தேதி கரோனா தொற்று இருக்கும் இரு பயணிகளை துபாய்க்கு அழைத்து வந்ததற்காக 24 மணி நேரத் தடையை துபாய் அரசு விதித்தது. ஒரு நாள் தடைக்குப் பின் மீண்டும் துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 23-ம் தேதியிலிருந்து இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆனால், மே 6-ம் தேதி முதல் வந்தே பாரத் மிஷன் மூலம் விமானங்களை மத்திய அரசு இயக்கி வருகிறது.

இது தவிர இந்தியாவில் அதிகரித்துவரும் கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, அக்டோபர் 3-ம் தேதிவரை இந்திய விமானத்துக்குத் தடை விதித்து ஹாங்காங் அரசு உத்தரவி்ட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in