

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தோர் சதவீதம் 80.86 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் புதிதாக 75 ஆயிரத்து 809 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்தப் பாதிப்பு 55 லட்சத்து 62 ஆயிரத்து 663 பேராக அதிகரித்துள்ளது. கடந்த இரு வாரங்களுக்குப் பின் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 75 ஆயிரமாகக் குறைந்துள்ளது.
கடைசியாக கடந்த 8-ம் தேதி 75 ஆயிரத்துக்கும் குறைவாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். இப்போது, இரு வாரங்களுக்குப் பின் குறைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தை எட்டிய நிலையில், 23-ம் தேதி 30 லட்சத்தையும், இம்மாதம் 5-ம் தேதி 40 லட்சத்தையும், 16-ம் தேதி 50 லட்சத்தையும் எட்டியது.
இதில் நம்பிக்கையளிக்கும் விதத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவிலிருந்து ஒரு லட்சத்து 1,468 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக கரோனா வைரஸிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 44 லட்சத்து 97 ஆயிரத்து 867 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 1,053 பேர் உயிரிந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 88 ஆயிரத்து 935 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்பு 1.60 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 344 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் 122 பேர், உத்தரப் பிரதேசத்தில் 88 பேர், மேற்கு வங்கத்தில் 62 பேர், தமிழகத்தில் 60 பேர், ஆந்திராவில் 51 பேர், பஞ்சாப்பில் 47 பேர், மத்தியப் பிரதேசத்தில் 37 பேர், டெல்லியில் 32 பேர் உயிரிழந்தனர்.
கரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9 லட்சத்து 75 ஆயிரத்து 861 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்தப் பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 17.54 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 6 கோடியே 53 லட்சத்து 25 ஆயிரத்து 779 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 9 லட்சத்து 33 ஆயிரத்து 185 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.