

மாநிலங்களவையில் விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய எம்.பி.க்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவர்கள் 2-வது நாளாக தர்ணாவில் ஈடுபட்டனர்.
இந்த எம்.பிக்களுக்கு மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் தேநீர் கொண்டு வந்தார். ஆனால் அதை எம்.பி.க்கள் ஏற்க மறுத்தனர்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் வேளாண் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட போது கடும் அமளி ஏற்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினார்கள்.
திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிபிஎம் உள்ளிட்ட சில கட்சிகளின் உறுப்பினர்கள் துணைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையில் விதிமுறைகளை மீறி நடந்து கொண்ட உறுப்பினர்கள் 8 பேரை ஒருவாரம் சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு நேற்று உத்தரவிட்டார்.
இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 8 எம்.பிக்களும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக தர்ணாவில் நேற்று ஈடுபட்டனர். விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்ட எம்.பிக்கள் 8 பேரும் 2-வது நாளாக இன்றும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்களுக்கு மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் தேநீர் கொண்டு வந்தார். ஆனால், மாநிலங்களவை துணைத்தலைவர் வழங்கிய தேநீரை ஏற்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எம்.பிக்கள் மறுத்துவிட்டனர்.