கொல்கத்தாவில் ஹவாலா மோசடி அம்பலம்: தமிழக தொழிலதிபர் குடோனில் கத்தை கத்தையாக பணம் பறிமுதல்

கொல்கத்தாவில் ஹவாலா மோசடி அம்பலம்: தமிழக தொழிலதிபர் குடோனில் கத்தை கத்தையாக பணம் பறிமுதல்
Updated on
1 min read

கொல்கத்தாவில், தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபருக்குச் சொந்தமான இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சாக்கு மூட்டைகளிலும், பீரோவிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் இந்த அதிரடிச் சோதனையை மேற்கொண்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு சுமார் ரூ.20 கோடி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து போலீஸார் கூறும்போது, "தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் மேற்குவங்கம், தமிழகம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் சட்டவிரோதமாக லாட்டரி தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்.

இந்நிலையில் உளவுத் துறையிடமிருந்து இதுதொடர்பாக ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் அவருக்குச் சொந்தமான சிலிகுரி உட்பட 9 இடங்களில் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் பல கோடி ரூபாய் பணம் சிக்கியுள்ளது.

போலி லாட்டரி கும்பல் ரூ.1000 கோடி ஹவாலா மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என வரையறுக்கப்பட்டுள்ளது. துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு பணத்தை அனுப்பி ஹவாலா மோசடியில் இக்கும்பல் ஈடுபட்டுள்ளது.

கொல்கத்தாவில் இவ்வளவு பெரிய ஹவாலா மோசடி அம்பலமானது இதுவே முதன்முறையாகும். இதுவரை இச்சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது" என்றார்.

இச்சோதனை குறித்து தி இந்து (ஆங்கில நாளிதழுக்கு) மத்திய அரசு ஊழியர் ஒருவர் அளித்த பேட்டியில், "சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரூ.50 கோடிக்கு மேல் பறிமுதல் செய்ய வாய்ப்பிருக்கிறது. சோதனை இறுதியில் பலரிடம் விசாரணைக்கு திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in