Published : 20 Sep 2020 11:55 AM
Last Updated : 20 Sep 2020 11:55 AM
இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக கரோனாவில் பாதிக்கப்பட்டோரைவிட, கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 94 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் புதிதாக 92 ஆயிரத்து 605 பேர் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 54 லட்சத்து 619 அதிகரித்தது.
கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தை எட்டிய நிலையில், 23-ம் தேதி 30 லட்சத்தையும், இம்மாதம் 5-ம் தேதி 40 லட்சத்தையும், 16-ம் தேதி 50 லட்சத்தையும் எட்டியது.
ஆனால் இதில் நம்பிக்கையளிக்கும் விதத்தில் தொடர்ந்து 2-வது நாளாக கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களைவிட, குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரி்த்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 94 ஆயிரத்து 612பேர் கரோனாவிலிருந்து குணமடைந்தனர்.
ஆனால், கரோனா பாதிப்பு 92 ஆயிரத்து 605 மட்டுமே இருக்கிறது. ஒட்டுமொத்தமாக கரோனாவிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை 43 லட்சத்து 3 ஆயிரத்து 43 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து மீள்வோர் 79.68 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 லட்சத்து 10 ஆயிரத்து 824 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 1,133 பேர் கரோனாவில் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 86,752 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு சதவீதம் 1.61 சதவீதமாக குறைந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 425 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் 114 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 84 பேரும், தமிழகத்தில் 66 பேரும், ஆந்திராவில் 58 பேரும் உயிரிழந்தனர்.
மேற்கு வங்கத்தில் 56 பேரும், பஞ்சாபில் 49 பேரும், மத்தியப்பிரதேசத்தில் 42 பேரும், டெல்லியில் 38 பேரும் உயிரிழந்தனர்.
ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 6 கோடியே 36 லட்சத்து 61 ஆயிரத்து 60 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 12 கோடியே 6 ஆயிரத்து 806 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT