

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் இன்று ஊரடங்கு காலத்தில் பலியான தொழிலாளர்கள் குறித்த கேள்வி எழுந்தது. இந்த விவரங்களை அரசு சேகரிக்கவில்லை என எழுத்துபூர்வமான பதிலில் மத்திய தொழிலாளர்துறை இணைஅமைச்சர் சந்தோஷ்குமார் கங்குவார் கைவிரித்துள்ளார்.
கரோனா பரவலினால் கடந்த மார்ச் 25 முதல் மொத்தம் 68 நாட்களுக்காக மத்திய அரசு ஊரடங்கு அறிவித்திருந்தது. தேசிய அளவிலான இந்த ஊரடங்கின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலரும் தங்கள் வீடு திரும்ப பல்வேறு வழிகளை கையாண்டனர்.
இதில், பல நூறு கி.மீ தொலைவிற்கு நடந்தே சென்றவர்களில் பலரும் வழியில் பல்வேறு காரணங்களால் பலியாகினர். இவர்களை தடுக்க முயன்ற போலீஸாருக்கு அஞ்சி ரயில் பாதை வழியாகவும் பலர் நடந்து சென்றனர்.
இதன் மீதான கேள்வியை இந்தியன் யூனியன் முஸ்லீக் லீக்கின் தமிழக எம்.பியான கே.நவாஸ்கனி உள்ளிட்ட மூவர் எழுப்பியிருந்தனர். இதில் அவர்கள், ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்கள் தங்கள் வீடுதிரும்பும் போது பலியான விவரங்கள் அளிக்கும்படி கேட்கப்பட்டிருந்தது.
இதற்கு எழுத்துபூர்வ மத்திய தொழிலாளர் துறை இணை அமைச்சர், அதன் மீதான விவரங்களை அரசு சேகரிக்கவில்லை எனப் பதில் அளித்திருந்தார். தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 72,154 எனவும் அதே பதிலில் குறிப்பிட்டிருந்தார்.