

வரும் அக்டோபர் மாத முதல் வாரத்துக்குள் இந்தியாவில் கரோனாவில் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 70 லட்சத்தை எட்டிவிடும். உலகிலேயே அதிகமாக கரோனாவில் பாதிக்கப்பட்ட நாடாக மாறும் என்று ஹைதராபாத்தில் உள்ள பிட்ஸ் பிலானி நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலில் இந்தியாவில் கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 லட்சத்தைக் கடந்துள்ளது. அமெரி்க்க சுகாதரத் துறை 8-ம் தேதி வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி அமெரிக்காவில் 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேர்ல்டோ மீட்டர் கணக்கின்படி அமெரிக்காவில் நேற்றைய நிலவரப்படி கரோனா பாதிப்பு 65 லட்சத்து 88 ஆயிரத்து 181 ஆக அதிகரி்த்துள்ளது. 1.96 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
ஹைதராபாத்தில் உள்ள பிட்ஸ் பிலானி கல்வி நிறுவனத்தின் அப்ளைட் மேத்தமேட்டிக்ஸ் துறையின் தலைவர் டாக்டர் டிஎஸ்எல் ராதிகா தலைமையிலான ஆய்வுக்குழுவினர் மேம்பட்ட புள்ளியியல் முறைகளைக் கொண்டு இந்தியாவில் எதிர்காலத்தில் கரோனா சூழல் குறித்து நடத்தியஆய்வில் இந்தமுடிவு கிடைத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், பேராசிரியர் ராதிகா தலைமையிலான குழுவினர் தங்களின் கண்டுபிடிப்புகள் குறித்து எல்க்வீயர் பதிப்பகத்திடம் தெரிவித்து சர்வதேச தொற்றுநோய்களுக்கான இதழில் (இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் இன்பெக்சியஸ் டிசீஸ்) வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆய்வு குறித்து பேராசிரியர் ராதிகா பிடிஐ நிருபரிடம் கூறுகையில் “ இந்தியாவில் கரோனாவில் நிலை, அதுதொடர்பாக ஏற்கெனவே இருக்கும் புள்ளிவிவரங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து மேம்பட்ட புள்ளியியல் தொழில்நுட்ப முறைகள் மூலம் ஆய்வு நடத்தினோம்.
இதில் இந்தியா அக்டோபர் மாதத்துக்குள் உலகிலேயே கரோனா பாதிப்பில் முதலாவது இடத்துக்குச் செல்லும். ஏறக்குறைய 70 லட்சம் பேர் அக்டோபர் மாதத்துக்குள் பாதிக்கப்படக்கூடும். அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் அமெரிக்காவின் பாதிப்பை இந்தியா மிஞ்சிவிடும். தொடர்ந்து மேற்கொள்ளப்படும் பரிசோதனை அடிப்படையில் இந்த எண்ணிக்கை இருக்கும்.
மேம்பட்ட இயந்திர கற்றல் நுட்பங்களின் அடிப்படையில் தங்கள் மாதிரியை செழுமைப்படுத்தும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.