

முன்னாள் பிரதமர் மறைந்த பி.வி.நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கக்கோரி தெலங்கானா சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பி.வி நரசிம்ம ராவின் நூற்றாண்டு விழாவை தெலங்கானா அரசு தற்போது கோலாகலமாக கொண்டாடி வருகிறது.
இந்நிலையில், தெலங்கானா சட்டப்பேரவையில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நரசிம்மராவின் நூற்றாண்டு விழாகுறித்து விவாதம் நடந்தது. அப்போது முதல்வர் கே.சந்திரசேகர ராவ் ஒரு தீர்மானம் கொண்டுவந்து பேசியதாவது:
நம் நாடு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது பிரதமரானவர் பி.வி. நரசிம்ம ராவ். அதன் பின்னர் இவர் பல சவால்களை சந்தித்தாலும், வெற்றிகரமான பிரதமராக போற்றப்பட்டார். தெலங்கானாவின் செல்லப்பிள்ளையான இவரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதில் இந்த அரசு பெருமை கொள்கிறது.
நரசிம்மராவ் ஒரு தீர்க்க தரிசியாவார். மன்மோகன் சிங்கை நிதி அமைச்சராக களமிறக்கிய பெருமை அவரையே சாரும். நாட்டின் புதிய பொருளாதார கொள்கைக்கு அடிக்கல் நாட்டியவர். முதன் முறையாக தென் இந்தியாவிலிருந்து பிரதமர் பதவி வகித்தவர். இவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கிஅந்த விருதுக்கே பெருமை சேர்க்கவேண்டும். இவ்வாறு முதல்வர் சந்திரசேகர ராவ் பேசினார்.
அதன் பின் பேசிய அவை உறுப்பினர்கள் அனைவரும் நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமெனும் தீர்மானத்தை வலியுறுத்தினர். இறுதியில் இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.