நாள்தோறும் அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை ; கட்டுப்படுத்த உத்தரவிடக்கோரி பொதுநல வழக்கு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

நாள்தோறும் அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை ; கட்டுப்படுத்த உத்தரவிடக்கோரி பொதுநல வழக்கு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
Updated on
1 min read

நாள்தோறும் அதிகரிக்கப்படும் பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவை அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரித்த உச்ச நீதிமன்றம் மனுதாரர் வழக்கை வாபஸ் பெற்றதால் தள்ளுபடி செய்தது..

பெட்ரோல் டீசல் விலை உயர்வை நிர்ணயிக்கும் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதன் மூலம் 15 நாட்களுக்கு ஒருமுறை விலை நிர்ணயம் தினமும் என மாற்றி அமைக்கப்பட்டது.

வரலாற்றில் இல்லாத அளவுக்கு தினமும் சிறிது சிறிதாக விலை ஏற்றி பெட்ரோல் விலைக்கு இணையாக டீசல் விலையும் உயர்ந்த நிகழ்வை நுகர்வோர் சந்தித்து வருகின்றனர். நாள்தோறும் ஏறும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் கேரளத்தைச் சேர்ந்த ஷாஜி என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அவரது பொது பொதுநல மனுவில், “ உலக அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்து உள்ளது. ஆனால் அதற்கான பலன் மக்களுக்கு போய்சேரவில்லை, மேலும் எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தி வருகின்றன.

குறிப்பாக கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை 8.30 ரூபாயும், டீசல் விலை 9.46 ரூபாயும் உயர்த்தப்பட்டன. எனவே இது தொடர்பாக உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.எஃப். நரிமன் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து வாதிட போகிறீர்களா ? வாதிட முயன்றால் கடும் அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரித்தனர்.

மேலும் இந்த விவகாரம் பொருளாதார கொள்கை சம்பந்தமாக முடிவு, இதில் நீதிமன்றம் தலையிடாது என தெரிவித்தனர். இதையடுத்து மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கௌரவ் அகர்வால் மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவித்தார்.

இதனையடுத்து மனு திரும்பப்பெறபட்டதை தொடர்ந்து பொதுநல மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in