

தனக்கு ஒய்பிளஸ் பாதுகாப்பு அளித்து உத்தரவிட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நடிகை கங்கனா ரனாவத் நன்றி தெரிவித்துள்ளார். அதேசமயம், ஒய்பிளஸ் பாதுகாப்பு அளித்த பாஜக அரசின் செயல் உள்நோக்கம் கொண்டது என்று மகாராஷ்டிரா அமைச்சர் விமர்சித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ம் தேதி அவரின் இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு குறித்து பாலிவுட் பிரபலங்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
பாலிவுட்டில் இருக்கும் போதைப் பொருள் கும்பல் குறித்தும், திரைமறைவில் இருக்கும் மாஃபியாக்கள் குறித்தும் சமீபத்தில் கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
இதனால் அவருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு அச்சுறுத்தல்கள் வந்ததாகக் கூறப்படுகிறது.இது தவிர சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்துக்கும், கங்கனா ரனாவத்துக்கும் இடையே கடந்த இரு நாட்களா ட்விட்டரில் கடுமையாக வாக்குவாதம் நடந்து வருகிறது.
மும்பையை மினி பாகிஸ்தான் என்று கூறியதற்கு கங்கனா மன்னிப்புக் கோர வேண்டும் என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு மன்னிப்புக் கேட்காவிட்டால், மும்பைக்கு வரக்கூடாது என்று எச்சரித்துள்ளார். இந்த சூழலில்தான் கங்கனா ரனாவத்துக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
தனக்கு ஒய்பிளஸ் பாதுகாப்பு அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நடிகை கங்கனா ரனாவத் நன்றி கூறியுள்ளார். கங்கனா ரனாவத்
தனது ட்விட்டர் பக்கத்தில், அவர் பதிவிட்ட கருத்தில், “ இந்த தேசத்தில் யாருமே தேசப்பற்றை ஒடுக்க முடியாது என்பதைத்தான் இது வெளிப்படுத்துகிறது. எனக்கு பாதுகாப்பு அளித்து உத்தரவிட்டஉள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நன்றி.
அமித் ஷா விரும்பியிருந்தால், நீங்கள் மும்பைக்கு சிறுநாட்களுக்குப்பின் வாருங்கள் எனக் கூறியிருக்கலாம். ஆனால், அமி்த் ஷா இந்தியாவின் மகளை மதிக்கிறார், என்னுடைய சுயமரியாதையை உணர்ந்துள்ளார். ஜெய்ஹிந்த்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத்துக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பை மத்தியஅரசு வழங்கியதில் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று மகாராஷ்டிரா அமைச்சர் ஒருவர் விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிரா அரசின் நிவாரணப்பிரிவு மற்றும்மறுவாழ்வுத்துறை அமைச்சர் விஜய் வாடேத்திவார் இன்று நிருபர்களிடம் கூறுகையில் “ நடிகை கங்கனா ரனாவத்துக்கு ஒய் பிளஸ் அளித்துள்ள மத்திய அ ரசின் செயல் அரசியல் உள்நோக்கம் கொண்டது. பாஜகவின் கிளியாக மாறிவிட்டார் கங்கனா.
கங்கனாவுக்கு பாஜக அரசு பாதுகாப்பு அளித்திருப்பதன் மூலம், மும்பை போலீஸார் குறித்தும், மகாராஷ்டிரா மாநிலம் குறித்தும் கங்கனா ரனாவத் பேசிய கருத்துக்களுக்கு பாஜக ஆதரவு தெரிவிக்கிறது என்று அர்த்தகமாகிறது. இது மாநில மக்களுக்கு இழைக்கும் துரோகம்”எனத் தெரிவி்த்தார்.