இந்திய-சீன எல்லையில் பதற்றம்; தூதரக ரீதியிலும், ராணுவ ரீதியிலும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்: இந்திய ராணுவ தளபதி பேட்டி

இந்திய-சீன எல்லையில் பதற்றம்; தூதரக ரீதியிலும், ராணுவ ரீதியிலும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்: இந்திய ராணுவ தளபதி பேட்டி
Updated on
1 min read

சீனா அத்துமீறல் காரணமாக லடாக் எல்லையில் பதற்றம் நிலவும் சூழ்நிலையில், ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே, லே பகுதிக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

அதன் பிறகு ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் பேட்டியளித்தார் அதில், “நாம் சீனாவுடன் தூதரக ரீதியிலும், ராணுவ ரீதியிலும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த பேச்சுவார்த்தை எதிர்காலத்திலும் தொடரும். இரு நாடுகளுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடு பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என நம்புகிறேன். எல்லையில் தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதை உறுதி செய்கிறேன். நமது நலன்களை , நம்மால் பாதுகாக்க முடியும்.

சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நம் பாதுகாப்புக்காக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். நம் பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைப்பு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் வண்ணம் சில படைகளை நிறுத்தியுள்ளோம்.

லேயில் பல இடங்களுக்கு சென்றேன். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன். நமது வீரர்கள் மன உறுதியுடன் உள்ளனர். அவர்கள் எந்த சவாலையும் சந்திக்க தயாராக உள்ளனர்” என்றார்.

சீன ராணுவத்தின் அத்துமீறல்களை இந்திய ராணுவம் தடுத்து வருவதையடுத்து பிரிகேடியர்கள் அளவில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆகஸ்ட் 29-30 ஆகிய தேதிகளில் இந்தியப் பகுதிக்குள் நுழைய முயன்ற சீன ராணுவத்தினரை இந்திய ராணுவம் தடுத்தது.

இந்நிலையில் இந்திய-சீன பேச்சுவார்த்தைகள் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதில் லெப்டினண்ட் ஜெனரல் மட்ட பேச்சுவார்த்தைகளும் நடந்துள்ளன, ஆனால் இவை எதுவும் விரும்பத்தகுந்த தீர்வை இதுவரை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in