இந்தியாவுக்கு 20 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் இலங்கை அருகே தீ பிடித்தது

இந்தியாவுக்கு 20 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் இலங்கை அருகே தீ பிடித்தது
Updated on
1 min read

குவைத்திலிருந்து, ஒடிசாவுக்கு எண்ணெய் ஏற்றி வந்த கப்பல், இலங்கை அருகே வந்தபோது, தீ விபத்தில் சிக்கியது. தீயை அணைப்பதற்கு, இந்திய கடலோர காவல் படை கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் விரைந்துள்ளன. இதனால் கச்சா எண்ணெய் கசியும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கவலை ஏற்பட்டுள்ளது.

மேற்காசிய நாடான குவைத்திலிருந்து, நம் நாட்டின் ஒடிசாவில் உள்ள பிரதீப் துறைமுகத்துக்கு, ' நியூடைமண்ட்' என்ற கப்பல், எண்ணெய் ஏற்றி வந்தது. இது பிரதீப் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டதாகும்.

இந்த கப்பல், நேற்று இலங்கை கடற்பகுதியில் வந்தபோது, இன்ஜின் அருகே, திடீரென தீப்பற்றியது. இந்த தீ, மளமளவென கப்பலின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது.தகவல் அறிந்த இலங்கை கடற்படை கப்பல்கள், சம்பவ இடத்துக்குச் சென்று, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இதையடுத்து, இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சவுர்யா, சாரங், சமுத்ரா ஆகிய கடலோர காவல் படை கப்பல்களும், ஒரு ஹெலிகாப்டரும், விபத்து நடந்த இடத்துக்குச் சென்று, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. இந்த கப்பலில், 20 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்களில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், ஒருவரை காணவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த கப்பல், மத்திய அமெரிக்க நாடான பனாமாவுக்கு சொந்தமானது என்றும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்காக பெட்ரோலிய பொருட்களை ஏற்றி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்தியக் கடலோரக் காவல்படை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் டேங்கர்களின் பின்புறத்தில் 2மீட்டர் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இலங்கைக் கடற்படை மீட்புக்காக 2 கப்பல்களை ஈடுபடுத்தியுள்ளது. நல்ல வேளையாக கப்பலின் சரக்குப் பகுதிக்கு தீ பரவவில்லை. இலங்கையிலிருந்து 65 கிமீ தொலைவில் நியூடைமண்ட் தீப்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in