Last Updated : 01 Sep, 2020 01:12 PM

 

Published : 01 Sep 2020 01:12 PM
Last Updated : 01 Sep 2020 01:12 PM

கோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது சட்டவிரோதம்; உடனடியாக விடுவியுங்கள்: அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு

கோரக்பூர் மருத்துவர் கஃபீல்கான் : கோப்புப்படம்

அலகாபாத்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் பேசியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கோரக்பூர் மருத்துவர் கஃபீல் கான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கலவரத்தைத் தூண்டிவிடும் வகையில் மருத்துவர் கஃபீல்கான் பேசியதாக குற்றம்சாட்டி அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உ.பி. அரசு கைது செய்தது.

இதனால்கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து மதுரா சிறையில் மருத்துவர் கஃபீல்கான் அடைக்கப்பட்டுள்ளார்
கடந்த ஜனவரி 29-ம் தேதி மும்பையில் கைது செய்யப்பட்ட கஃபீல்கான் அலிகார் அழைத்து வரப்பட்டார்.

அவர் மீது தொடக்கத்தில் ஐபிசி 153ஏ பிரிவில் மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதன்பின் ஐபிசி 153பி மற்றும் 505(2)ஆகியவை சேர்க்கப்பட்டன.

இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 10-ம் தேதி அலிகார் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியநிலையில், 13-ம் தேதி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கஃபீல்கானை உ.பி.அரசு கைது செய்தது.

உச்ச நீதிமன்றத்தில் கஃபீல்கான் கைது செய்யப்பட்டது தொடர்பாக ஆட்கொணர்வு மனுவை கஃபீல்கான் தாய் நுஷ்ரத் தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் அடுத்த 15 நாட்களில் முடிவெடுக்க அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவி்ட்டது.

இதையடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றம், அடுத்த 10 நாட்களுக்குள் பதில் அளிக்கக் கோரி உ.பி. அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், கஃபீல்கான் மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை மேலும் 3 மாதங்கள் நீட்டித்து கடந்த மாதம் 5-ம் தேதி உ.பி. அரசு புதிய உத்தரவு பிறப்பித்தது.

இந்த சூழலில் மருத்துவர் கஃபீல்கான் தாய் நுஷ்ரத் கான் தாக்கல் செய்திருந்த மனு அலாகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள், கோவிந்த் மாத்தூர், சவுமித்ரா தயால் சிங் ஆகியோர் முன் இன்று விசாரிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், “ மருத்துவர் கஃபீல்கான் மீத தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தது சட்டவிரோதம். அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

மருத்துவர் கஃபீல்கான் பேசியது குறித்து அதிகாரிகள் தாக்கல் செய்த ஆவணங்களைப் பார்த்தோம். அதில் அவர் எந்தவிதமான வன்முறையைத் தூண்டும் விதத்திலோ, வெறுப்பை விதிக்கும் விதத்திலோ பேசவில்லை. அலிகார் நகரின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அவரின் பேச்சு அமையவில்லை.

மாவட்ட ஆட்சியர் கஃபீல்கான் பேச்சில் குறிப்பிட்ட விஷயங்களையும் மட்டும் கோடிட்டு காட்டுகிறார், அதன் உண்மையான நோக்கத்தை புறக்கணித்து உரையின் சில சொற்றொடர்களைசத் தேர்வு செய்து காண்பித்ததுபோல் தெரிகிறது. ஆதலால், கஃபீல்கானை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x