தேசம் மதிப்புமிக்க மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது: பிரணாப் மறைவுக்கு குடியரசுத் தலைவர் இரங்கல்

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி : கோப்புப்படம்
குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி : கோப்புப்படம்
Updated on
2 min read


இந்த தேசம் மதிப்புமிக்க மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது, பிரணாப் முகர்ஜியின் மறைவு ஒரு சகாப்தம் கடந்து சென்றதுபோலாகும் என்று குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி மூளையில் ஏற்பட்ட சிறிய கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதற்காக கடந்த 10ம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கரோனா இருப்பது தெரியவந்தது.

இருப்பினும் பிரணாப் முகர்ஜிக்கு அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற்றப்பட்டபின் கோமா நிலைக்குச் சென்றார். கடந்த சில வாரங்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று பிரணாப் முகர்ஜி காலமானார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

பிரணாப் முகர்ஜி காலமான செய்தி கேட்கவே வேதனையாக இருக்கிறது. பிரணாப் முகர்ஜியின் மறைவு ஒரு சகாப்தம் கடந்து சென்றது போல் இருக்கிறது. இந்த தேசம் மதிப்பு மிக்க மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது.

பொது வாழ்க்கையில் ஒரு மகத்தான மனிதர். பாரததேசத்துக்கு, துறவியைப் போன்று உணர்வுப்பூர்வமாக சேவையாற்றினார். தேசம் தனது மதிப்புமிக்க மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவிக்கிறேன்.

பிரணாப்முகர்ஜி குடியரசுத் தலைவராக இருந்தபோது பாரம்பரியம் மற்றும் நவீனத்துவத்தை ஒருங்கிணைக்கக் கூடியவராகத்திகழ்ந்தார். 50 ஆண்டுகால சிறப்பான பொது வாழ்வில் அவர் வகித்த பதவிகளை பொருட்படுத்தாமல் மக்களோடு ஆழ்ந்த தொடர்பில் இருந்தார். அரசியல்வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களையும் பிரணாப் முகர்ஜி நேசித்தார்.

நாட்டின் முதல் குடிமகனாக இருந்த பிரணாப் முகர்ஜி, அனைவருடன் தொடர்பில் இருந்தார், குடியரசுத் தலைவர் மாளிகையை மக்களோடு நெருக்கமாக வைத்திருந்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில் “பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கை அவரின் மேன்மை மிகுந்த சேவையாலும், தாய்நாட்டிற்கு அழியாத பங்களிப்பாலும் எப்போதுமே போற்றப்படும்.

பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி மறைவு ஆழ்ந்த வேதனையைத் தருகிறது. மிகுந்த அர்ப்பணிப்புடன் தேசத்துக்கு சேவை செய்த அனுபவம்மிக்கத் தலைவர். பிரணாப் முகர்ஜியின் போற்றத்தகுந்த வாழ்க்கை நாட்டுக்கே பெருமை சேர்க்கும்.

பிரணாப் முகர்ஜியின் மறைவு இந்திய அரசியலில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், ஈடுசெய்ய முடியாத இழப்பி்ல் உள்ள ஆதரவாளர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in