

பேஸ்புக் நிறுவனத்தின் இந்தியத் தலைமை ஆளும் பாஜகவுடன் உள்கையாகச் செயல்படுகிறது என்ற விமர்சனங்களை காங்கிரஸ் கட்சி சமீபகாலமாக உரக்கப் பேசி வருகிறது.
நேற்றும் அதன் செய்தித் தொடர்பாளர் கேரா, பேஸ்புக் மட்டுமல்ல வாட்ஸ் அப் குழுமமும் ஆளும் பாஜகவுக்கு நெருக்கம் என்று இன்னொரு குண்டைத் தூக்கிப் போட்டார், அதனால்தான் சிறுபான்மையினருக்கு எதிரான பாஜக தலைவர்களின் வெறுப்பு உமிழும் பேச்சுகளை சமூக ஊடகங்களில் நீக்காமல் அதனை ஊக்குவிக்கிறது என்று காங்கிரஸ் சாடி வருகிறது.
இதுதொடர்பாக ஃபேஸ்புக் தலைவர் மார்க் ஸூக்கர்பர்க்குக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.
இந்நிலையில் ராகுல் காந்தியைத் தாக்கிப் பேசியா பாஜக ஐடிப் பிரிவு தலைவர் அமித் மால்வியா, “அடுத்தடுத்த தேர்தல் தோல்விகளுக்கு காங்கிரஸும் ராகுல் காந்தியும் தங்களைத் தவிர பிறர்தான் காரணம் என்று கூறிவருகின்றனர்.
அவர்களுக்கு என்ன புரியவில்லை எனில், காங்கிரஸ் கட்சியை மக்கள் ஆதரிக்கவில்லை, ராகுல் காந்தியின் தொலைநோக்கற்ற தலைமையையும் மக்கள் விரும்பவில்லை என்பதே.
எனவே ஏதோ சமூக ஊடகம் மட்டுமல்ல நாட்டு மக்களே இவர்களை நிராகரித்து விட்டனர்.
இந்த நாட்களில் காங்கிரஸின் மனீத் திவாரி முதல் கே.சி.வேணுகோபால் வரை சமூக ஊடகங்களுக்கு கடிதம் எழுதத் தொடங்கி விட்டனர்.
2019 தேர்தலின் போது இவர்கள்தான் கேம்பிரிட்ஜ் அனலிடிகாவுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தனர். எனவே யாரை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டியுள்ளது” என்றார்.
40 கோடி இந்தியர்களின் சுயவிவரங்கள், வங்கி நடவடிக்கைகள், பரிவர்த்தனைகள் குறித்த விவரங்களை இந்த சமூக ஊடகங்கள் பாஜகவிடம் அளிக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ள நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் பதிலளிக்காமல் காங்கிரஸ் கட்சியையும் ராகுல் காந்தியையும் பாஜக ஐடி பிரிவு தலைவர் தாக்கிப் பேசுவது என்ன மாதிரியான அரசியல் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் கேள்வி எழுப்புகின்றன.