Last Updated : 28 Aug, 2020 05:08 PM

 

Published : 28 Aug 2020 05:08 PM
Last Updated : 28 Aug 2020 05:08 PM

முகக்கவசம் அணிய மறுக்கும் பயணிக்குப் பறக்கத் தடை; பேக்கிங் செய்த உணவுகளைப் பயணிகளுக்கு வழங்கலாம்: விமான நிறுவனங்களுக்கு மத்தியஅரசு அனுமதி

விமானத்தில் பயணிக்கும் பயணி முகக்கவசம் அணிய மறுத்தால், அந்தப் பயணியைப் பறக்கத் தடை விதிக்கும் பட்டியலில் சேர்க்கலாம் என்றும், சமைத்து பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளைப் பயணிகளுக்கு வழங்கவும் விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மே 25-ம் தேதி முதல் உள்நாட்டில் செல்லும் விமானங்களில் பயணிகளுக்கு எந்தவிதமான உணவுப்பொருளும், குளிர்பானங்களும் வழங்கத் தடை விதிக்கப்பட்டது. சர்வதேச விமானங்கள் பறக்கும் நேர அளவைப் பொறுத்து, பயணிகளுக்கு உணவு, நொறுக்குத்தீனிகள் வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்குப் பின் தற்போது பயணிகளுக்குச் சமைத்து ஏற்கெனவே பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளை வழங்கலாம் என்று விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:

''உள்நாட்டு விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு ஏற்கெனவே சமைக்கப்பட்ட உணவுகள், நொறுக்குத்தீனிகள், குளிர்பானங்கள், சூப் போன்றவற்றைப் பயண நேரத்தில் வழங்க அனுமதிக்கப்படுகிறது.

சர்வதேச விமானங்கள் பயணிகளுக்குப் பயண நேரத்தின்போது சூடான உணவுகள், குறிப்பிட்ட பானங்களை நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கலாம். உணவுகளை வழங்கும்போது, ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகள், ட்ரேக்கள், ஸ்பூன் போன்றவற்றை சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களில் விமான நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு முறை உணவு பரிமாறும்போதும் புதிய கையுறைகளை அணிந்து விமான ஊழியர்கள் உணவுகளைப் பயணிகளுக்கு வழங்க வேண்டும்.

விமான நிலையத்தில் இருக்கும் பொழுதுபோக்கு அம்சங்களைப் பயணிகள் சர்வதேச மற்றும் உள்நாட்டுப் பயணத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒருமுறை பயன்படுத்தக்கூடிய இயர்ஃபோன், அல்லது இருக்கும் இயர்ஃபோன் சுத்தமாகவும் பராமரிக்கப்பட வேண்டும்''.

மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

இதனிடையே சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “விமானத்தில் பயணிக்கும்போது பயணி முகக்கவசம் அணிய மறுத்தால் அவரைப் பறக்கத் தடை விதிக்கும் பட்டியலில் சேர்க்கலாம். இதற்காக மத்திய அரசு புதிய உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை. ஆனால், ஏற்கெனவே இருக்கும் விதிமுறையின்படி அந்தந்த விமான நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் விதிகளின்படி, ஒரு பயணி விதிமுறைகளை மீறிச் செயல்பட்டு, ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தாலோ அல்லது சண்டையிட்டாலோ அவரை அந்த விமான நிறுவனம் விமானப் பயணத்துக்குத் தகுதியில்லாத நபர் என்ற பட்டியலில் சேர்க்கலாம். அதைப் பின்பற்றி மற்ற விமான நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்க முடியும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x