

சீனாவின் பெயரை உச்சரிக்க ஆட்சியாளர்கள் அஞ்சுவது ஏன் என காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தபோதிலும், 74-வதுசுதந்திரதினம் இன்று நாடுமுழுவதும் சமூக விலகலைக் கடைபிடித்து, சுகாதாரப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
டெல்லியில் பிரதமர் மோடி, இன்று காலை ராஜ் காட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்று மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன்பின் டெல்லி செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடி 74-வது சுதந்திரத்தினத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.
அவர் பேசுகையில் சீனா மற்றும் பாகிஸ்தான் பெயரை குறிப்பிடாமல் எல்லை கட்டுப்பாட்டு கோட்டிலிருந்து, நடைமுறை எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வரை இந்தியாவுடன் மோத நினைத்தவர்களுக்கு, அவர்களுக்கு புரியும் மொழியில் நமது வீரர்கள் தக்க பதிலடி தந்துள்ளனர் எனக் கூறினார்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில் ‘‘ ராணுவம், துணை ராணுவம் மற்றும் போலீஸ் படைகள் குறித்து, 130 கோடி இந்தியர்களும் பெருமைப்படுகிறோம். நம் மீதான தாக்குதல்களுக்கு வீரர்கள் தக்க பதிலடி வழங்கியுள்ளனர். ஆனால், சீனாவின் பெயரை உச்சரிக்க நம் ஆட்சியாளர்கள் அஞ்சுவது ஏன். இன்று நமது பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளது. சீன படைகளை எவ்வாறு பின்னுக்கு தள்ளி நமது பிராந்திய ஒருமைப்பாட்டை எவ்வாறு பாதுகாக்க போகிறீர்கள் என அரசிடம் கேட்க வேண்டும்.
நேரு, வல்லபாய் படேல் மற்றும் பிற சுதந்திர போராட்ட வீரர்களால் உருவாக்கப்பட்ட சுயசார்பு திட்டம் பற்றி பேசுபவர்கள் 32 பொதுத் துறை நிறுவனங்களை விற்றுள்ளது ஏன்’’ எனக் கூறியுள்ளார்.