

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கைதாகி உள்ள ஸ்வப்னா சுரேஷ் என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், மேலும் தூதரக பார்சலை விடுவிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
மேலும் தங்கக் கடத்தலில் கிடைக்கும் பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்துவதாக தகவல் வந்துள்ளது. எனவே, ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. - பிடிஐ