

ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ஜெய் ஸ்ரீராம், மோடி வாழ்க எனக் கூற மறுத்ததால் அவர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து சிகார் சதார் போலீஸ் நிலைய அதிகாரி புஷ்பேந்திர சிங் கூறியதாவது:
சிகார் நகரைச் சேர்ந்தவர் கஃபார் அகமது கச்சாவா(வயது 52). கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் கஃபார் அகமது அருகே இருக்கும் கிராமத்தில் ஒருவரை தனது ஆட்டோவில் இறக்கிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது சாலையில் இருவர் கஃபாரின் ஆட்டோவை மறித்து புகையில் கேட்டுள்ளனர்.
கஃபாரும் தன்னிடம் இருந்த புகையிலையை கொடுத்துள்ளார். அதை வாங்க மறுத்த இருவரும், ஜெய் ஸ்ரீராம் எனக் கூறுங்கள் எனத் தெரிவித்துள்ளனர். ஆனால், அதைக் கூற கஃபார் மறுத்துள்ளார். இருவரும் சேர்ந்து கஃபாரை கம்பால் தாக்கியுள்ளனர்.
அவர்களிடம் இருந்து தப்பித்த கஃபார் தன்னுடைய ஆட்டோவை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளார். ஆனால், அந்த இருவரும் தங்களின் வாகனத்தில் துரத்தி வந்து இடைமறித்து நிறுத்தியுள்ளனர். கஃபாரை ஆட்டோவிலிருந்து கீழே இறக்கி ஜெய் ஸ்ரீராம், மோடி வாழ்க என்று கூறுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.
ஆனால், கஃபார் கூற மறுக்கவே அவரின் தாடியைப் பிடித்து இழுத்து தாக்கியுள்ளனர், இதில் கஃபாரின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரின் முன்பற்கள் உடைந்து, கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கஃபாரிடம் இருந்து கைக்கடிகாரம், பணத்தை பறித்துக்கொண்டு அந்த இருவரும் தப்பிவிட்டனர்.
இது தொடர்பாக சிகார் சதார் போலீஸ் நிலையத்தில் கஃபார் புகார் அளித்தார். அவரின் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி இருவரைக் கைது செய்துள்ளோம். அவர்கள் பெயர் ஷம்பு தயால்(வயது35) ராஜேந்திர ஜாட்(33) என்று விசாரணையில் தெரியவந்தது.
அந்த இருவரும் குடிபோதையில் கஃபாரிடம் இவ்வாறு நடந்து கொண்டதாக விசாரணையில் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து பணத்தையும், கஃபாரின் கைக்கடிகாரத்தையும் பறிமுதல் செய்துள்ளோம். இருவரின் மீது முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது
இவ்வாறு புஷ்பேந்திர சிங் தெரிவித்தார்.