

அயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட தன்னை அழைக்க மாட்டார்கள் எனவும், அங்கு தான் செல்லவும் மாட்டேன் என்றும் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். நேற்று ராமர் கோயில் பூமி பூஜை விழாவிற்கு வந்தவரிடம் எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலில் அவர் இக்கருத்தை தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கின் இறுதித் தீர்ப்பின்படி அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுகிறது. இதற்காக நேற்று நடைபெற்ற பூமி பூஜை விழாவில் கலந்துகொள்ள உபி முதல்வர் யோகி வந்திருந்தார்.
விழா முடிந்த பின் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது முதல்வர் யோகியிடம் ராமர் கோயிலை போல், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கட்டப்படவிருக்கும் புதிய மசூதி மீது கேள்வி எழுப்பப்பட்டது.
அதில், ’உபி முதல்வராக ராமர் கோயிலின் அடிக்கல்நாட்டு விழாவில் கலந்துகொண்டது போல், மசூதிக்கும் செல்வீர்களா?’ என முதல்வர் யோகியிடம் கேட்கப்பட்டது. இதற்கு அவர் தயங்காமல் பதில் அளித்திருந்தார்.
அப்போது உபி முதல்வர் யோகி கூறும்போது, ‘எனது பணியை நான் எப்போதும் செய்து கொண்டிருப்பேன். மசூதியின் அடிக்கல்நாட்டு விழாவிற்கு என்னை எவரும் அழைக்க மாட்டார்கள், நான் அதற்கு செல்லவும் மாட்டேன்.’ எனத் தெரிவித்தார்.
அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜைக்கு முன்பாக உபி சன்னி முஸ்லிம் மத்திய வஃக்பு வாரியத்திடம் மசூதிக்கான 5 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்பட்டது. இது, ஸ்ரீராமஜென்மபூமியில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள தனிபூர் கிராமத்தில் அமையவிருக்கிறது.