Published : 05 Aug 2020 08:02 PM
Last Updated : 05 Aug 2020 08:02 PM

அயோத்தி பூமி பூஜையை தொடர்ந்து சரயூ நதியில் ஆரத்தி: மோகன் பாகவத் உள்ளிட்டோர் பங்கேற்பு

அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை விழாவை தொடர்ந்து மாலையில் சரயூ நதிக்கரையில் மகா ஆரத்தி நடைபெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

இதன்படி இன்று (ஆகஸ்ட் 5-ம் தேதி) அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. பிரதமர் மோடி கலந்து கொண்டு ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அங்கு நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

வேத மந்திரங்களை முழங்கி, பூஜை பூஜையைத் தொடங்கினர். பூமி பூஜை முடிந்தபின் ராமர் கோயிலுக்காக 40 கிலோ எடையுள்ள முதல் வெள்ளி செங்கல்லை பிரதமர் மோடி தொட்டு வைத்து அடிக்கல் நாட்டினார்.

விழாவில் உ.பி. ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை தலைவர் நிருத்திய கோபால் தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பூமி பூஜையில் பங்கேற்ற பிரதமர் மோடி, மோகன் பாகவத், ஆதித்யநாத், ஆனந்திபென் படேல் ஆகியோரும் முகக்கவசம் அணிந்து, சமூக விலகலுடன் பூஜையில் பங்கேற்றனர்.மற்ற விஐபிக்கள், சாதுக்கள், பீடாதிபதிகள் என நூற்றுக்கணக்கோர் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து பங்கேற்றனர்.

கரோனா தொற்று அச்சம் காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்க குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அதேசமயம் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இதனால் நாடுமுழுவதும் மக்கள் தொலைக்காட்சி வாயிலாக பார்த்தனர். பின்னர் மாலையில் சரயூ நதியில் சூர்ய அஸ்தமனத்தை பக்தர்கள் பார்த்து ரசித்தனர்.

— ANI UP (@ANINewsUP) August 5, 2020

இதனைத் தொடர்ந்து இன்று மாலை தொடங்கி சரயூ நதிக்கரையில் ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டார்.

தொடர்ந்து தீப உற்சவம் நடந்தது. இரவு நேரத்தில் அயோத்தி முழுவதும் விளக்குகள் ஏற்றப்பட்டன.

லக்னோவில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் அவரது வீட்டிற்கு வெளியே பட்டாசு கொளுத்தி தீப உப உற்சவத்தில் பங்கேற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x